இலவசங்களின் காலம்
இன்றைய காலம் இலவசங்களின் காலம், அன்பளிப்பு
காலம், தள்ளுபடி காலம் என்று சொல்லப்படும் காலம். ஒரு சேலை வாங்கினால், ஒரு சேலை இலவசம். ஒரு சமையல்
பொருள் வாங்கினால் அதற்கு மற்றொரு பொருள் இலவசம். 1000 ரூபாய் கொடுத்து ஒருபொருள் வாங்கினால் அதில் ஒரு சூதாட்டச் சீட்டு உண்டு. அதுபோல் 10 சூதாட்டச்
சீட்டைச் சேர்த்தால் அதற்கு ஒரு பரிசு உண்டு.
“மனமது செம்மை ஆனால் மந்திரம் செபிக்கவேண்டாம்”
(சிவவாக்கியர்)
என்றார்களே! செம்மைப்படுத்த முடியா விட்டாலும்
கூட மனதை அலை மோதச் செய்யாமல் இருக்கவாவது விடுகிறார்களா?
அது
மட்டுமா ஒரு தேதியை அறிவிப்பு செய்து விட்டு இந்த தினத்திற்குள் இந்தப் பொருட்களை வாங்கினால் உங்களுக்கு இன்ன இன்ன தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிப்பு வேறு.
சமீபத்திய வரவு, மின்னணு வர்த்தக நிறுவங்களின்
Flash Sale/ Lightning Deals. அதைப் பார்க்கும் மக்கள்
சிந்தனா சக்தியை இழந்து, ஏதோ கிடைத்தற்கரிய பொக்கிஷம் அதைத் தவறவிட்டு விடுவோமே என்று ஒரே பரபரப்பு! தவிப்பு!.
ஆயிரம் கொடுத்தால்
5 பொருள் இலவசம் என்று விளம்பரம் செய்கிறார்களே! இந்த
விளம்பரச் செலவை யார் ஏற்பது? ஒருமூலதனம்
செய்து விளம்பரம் செய்யும் முதலீட்டாளர் இலாபம் இல்லாமல் எந்த வியாபாரம் செய்வான்? இவற்றைச்
சிந்திக்கும் திறனை நாம் வளர்க்கவில்லை. அதிக
வட்டி தருவதாகவும், பரிசுப்பொருள்கள் தருவதாகவும் அறிவித்துவிட்டு ஊர் மக்கள் பணத்தை வாரிச் சுருட்டிக்கொண்டு எத்தனை சீட்டுக் கம்பெனிகள் மக்களை ஏமாற்றிவிட்டன.
இவற்றை எல்லாம் முன் கூட்டியே தனது ஞானக்கண்ணால் கண்ட வள்ளல்பெருந்தகை மக்கள் மனத்தில் ஆன்மிக சிந்தனையை, நேர்மையான எண்ணத்தை வளர்க்க ஒரு பாடல் பாடுகின்றார்.
“ஈ
என்று நான் ஒருவரிடம் நின்று கேளாத
இயல்பும் என்னிடம் ஒருவர் ஈது
இடுவென்றபோது அவர்க்கு இலை என்று சொல்லாமல்
இடுகின்ற திறமும் இறையாம்
நீஎன்றும், எனைவிடா நிலையும் நான் என்றும் உன்
நினைவிடா நெறியும் அயலார்
நிதிஒன்றும் நயவாத மனமும் மெய்ந்நிலை நின்று
நெகிழாத்திடமும் உலகில்
சீஎன்று பேய் என்று நாய் என்று பிறர் தமைத்
தீங்கு சொல்லாத தெளிவும்
திறம் ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்துநின்
திருவடிக்கு ஆளாக்குவாய்......”
(அருட்பா)
என்று விண்ணப்பம் செய்கிறார்.
எந்தச் சமயத்தைச் சேர்ந்த அன்பர்களும் இறைவனை வேண்டும்போது அவரவர் தெய்வத்திடம் எப்படி வேண்ட வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார். தற்போது
மனித சமுதாயத்தைப் பீடித்துள்ள நோய் எது என்றால் பரபரப்பு.
ஏமாற்றி விற்கும் பொருள்களை அவர்கள் குறிப்பிடும் தேதியில் நாம் வாங்க முடியாவிட்டாலும் பரபரப்பு. நாம் வாங்க முடியாத சூழ்நிலையில் உள்ளபோது அண்டை அயலார் உறவினர்கள் வாங்கினாலும் பரபரப்பு. எதிலும் பரபரப்பு. எப்போதும் பரபரப்பு. கவர்ச்சி மிக்க விளம்பரங்களுக்கு அடிமையாகி அதை நாம் வாங்க முடியாதபோது எரிச்சலும், புகைச்சலுமாகி வாழ்வின் எல்லைக்கே போய்விடும் மக்களும் உள்ளார்கள்.
அயலார் நிதி ஒன்றும் நயவாத மனம் என்பதில் உள்ள கருத்தைப் புரிந்துகொண்டால் நமக்கு இந்த நிலை ஏற்படுமா!
பொருள் மட்டுமல்ல அயலார் நிதி என்பது. ஆண்,
பெண் இருபாலருக்கும் அயலார் நிதி ஒன்றும் நயவாத மனம் என்பதில் மிகுந்த பொறுப்பு உள்ளது. தெருவில்
போகும் பெண், ஆண் இருவரும் ஒருவரையொருவர் பார்க்கும்போது ஒரு ஆடவன் இந்தப் பெண் நமது உடைமை அல்ல. இவரிடம்
நாம் தகாதவழியில் நடக்கக்கூடாது என்று நினைத்தால் ஈவ் டீசிங் என்னும் பெயரால் பல உயிர்கள் இழப்பிற்கு காரணமாக மாட்டோமே.
கண்ணியம் மிக்க குடும்பப்பெண்களை அயலார் நிதி என்று ஆண்கள் நினைக்கத் தொடங்கிவிட்டால் இன்றைய பெரும்பாலான சமுதாயச் சீர்கேடுகள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்குமே!
சமுதாயத்தைத் தூக்கி நிலை நிறுத்துவதற்கு வள்ளல் பெருமானார் பல கருத்துக்களை விட்டுச்சென்றுள்ளார்.
இலவசமாகப் பெறப்படும் எதுவும் தகுதியானதாக அமையாது.
உழைக்காமல் பெறும் ஊதியம் வினைக் கோட்பாட்டிற்கு வழி வகுக்கும். இலவசங்களைப் புறந்தள்ளி உழைப்பால் உயா்வோம்.
சுயக் கட்டுப்பாட்டால்
ஆன்ம பலத்தைப்
பெருக்குவோம்.
புறச்சூழலால் சுற்றுப்புறம் மட்டும் மாசடைகின்றது. அகச்சூழல் மனிதனின் உடலையும், மனத்தையும் அசுத்தம் செய்கின்றது.
மனத்தின் தடுமாற்றத்தை தடுத்தாள வள்ளளாரின் பாடல்கள் மூலம் மிகவும் எளிய நவூநடையில் விளக்கியதற்கு மிக்க நன்றி அம்மா
ReplyDeleteSuperb article amma ������
ReplyDelete