பணியுமாம் என்றும் பெருமை
திருப்பூந்துருத்தியில் புது மடம் ஒன்று கட்டுகின்றார் நாவரசா். அங்கிருந்தபடியே தன்னுடைய வாழ்வில் நடந்த ஒவ்வொரு செயலுக்கும் இறைவன் தோன்றும் துணையாயும் , தோன்றாத் துணையாயும் இருந்து எவ்வாறு வழிகாட்டினான் என்று நினைத்துப் பார்க்கின்றார். முன்னம் முனியாகித் தவமுயன்று இப்பிறவி கிடைத்தும் கூட இறைத்தொண்டில் இடையீடு ஏற்பட்டதே! என்று எண்ணி மனம் வருத்தமடைகின்றார். ஒவ்வொரு செயலும், சிந்தனையும் இறையருள் துணை இருந்தால் மட்டுமே செம்மையாக நடைபெறும்.
யான் எனது என்பதன் செருக்கு அற்று வாழ்வதற்கு இறைவனின் அருள்வேண்டும் எனச் சிந்திக்கின்றார்.
“ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே
அடங்குவித்தால் ஆரொருவர் அடங்காதாரே
ஓட்டுவித்தால் யாரொருவர் ஓடாதாரே
உருகுவித்தால் யாரொருவர் உருகாதாரே
பாட்டுவித்தால் யாரொருவர் பாடாதாரே
பணிவித்தால் யாரொருவர் பணியாதாரே
காட்டுவித்தால் ஆரொருவர் காணாதாரே
காண்பார் ஆர் கண்ணுதலாய்க் காட்டாக்காலே”
(திருமுறை 6)
என்று கண்ணுதல் பெருமான் காட்டிக் கொடுத்ததால்தான் இவ்வளவு தொண்டும் திருப்பணியும் தம்மால் செய்ய முடிந்தது என்று நினைத்தார்.
திருநாவுக்கரசர் , திருப்பூந்துருத்தியில் உள்ளார் என்பதை அறிந்த ஞானசம்பந்தர் திருநாவுக்கரசரைக் காண்பதற்கு பூந்துருத்தி வருகின்றார். ஞானசம்பந்தர் தன்னைத் தேடி வருகிறார் என்பதை அறிந்த நாவரசர் எதிர்கொண்டு அழைக்கச் சென்றார். சிவனடியார்கள் ஞானசம்பந்தரைப் பல்லக்கில் வைத்து தூக்கி வருவதை அறிந்த நாவரசர், தானும் ஒருவராகச் சென்று பல்லக்குத் தூக்குகின்றார்.
பூந்துருத்தி வந்ததும் அப்பர் எதிர்கொண்டு அழைக்க வருவாரே! இதுவரையும் வரவில்லையே! என நினைத்த ஞானசம்பந்தர் ‘அப்பர் எங்குற்றார்?’ என வினவினார். பல்லக்குத் தூக்கி வரும் அப்பர்.
“அடியேன் உம் அடிகள் தாங்கிவரும் பெருவாழ்வு வந்து
எய்தப்பெற்று இங்குற்றேன்”
என்றார். பல்லக்கிலிருந்து ஞானசம்பந்தர் இறங்கி அப்பர் அடி பணிகின்றார். அப்பரும் ஞானசம்பந்தர் அடி பணிகின்றார்.
அருள் அடியவா்கள் தங்களுக்குள் ஏற்றதாழ்வு பார்ப்பதில்லை. தானே பெரியவன் என்று தருக்கித் திரிவதுமில்லை. அதனால் இறைவன் அவா்கள் அன்பு எனும் கடத்துள் அமா்ந்து அருள் செய்கின்றான்.