24 November 2018

ThiruGnanaSambandar's Advice - சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை


சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை



     கிளிப்பிள்ளைக்கு இயல்பாகச் சிந்திக்கும் திறன் கிடையாது.  யாரேனும் எதையாவது சொல்லிக் கொடுத்துப் பழக்கி வைத்திருந்தால் அதையே சொல்லும். ஆனால் பூனையைக் கண்டவுடன் நாம் எதைப் பழக்கி வைத்திருந்தாலும், கிளி அதை மறந்துவிட்டு, உயிர்ப் பயத்தில் கீ, கீ என்றும் கத்தும்.  அதுமாதிரி ஆன்மாக்கள் ஆகிவிடக்கூடாது. அதனால் கிளியின் பயிற்சிபோல் இல்லாமல் ஆழமாக ஆற்றல்மிக்க அன்போடு இறைவனின் திருநாமத்தை அழைக்கவேண்டும். "நீ நாளும் நந்நெஞ்சே நினை".  ஒருநாள் கூட மறக்கக்கூடாது.  ஒரு நொடி கூட மறக்காமல் இருக்கவேண்டும். பயிற்சி பெற்ற மனத்தினால் மட்டுமே சாகும் தறுவாயில் இறைவனை நினைக்கமுடியும்.


     சாநாளும் , வாநாளும் யார் அறிவார்? எப்போது சாவு வரும் என்பது யாருக்கும் தெரியாது. அதனால் நீநாளும் நந்நெஞ்சே நினை என்று அறிவுறுத்துகின்றார் ஞானசம்பந்தர்.


பயிற்சி
பெற்ற மனம் கூட சாவு வரும்போது மரண பயத்தில்தான் இருக்கும் என்று எல்லா அருளாளர்களும் பாடியுள்ளார்கள்.



சிறக்கும் கமலத்திருவே நின்சேவடி சென்னி வைக்கத்
 துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற
 உறக்கம் தரவந்து உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு
 மறக்கும் பொழுது என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே

                                     (அபிராமி அந்தாதி)


     உடம்போடு உயிரின் தொடர்பு விடுபடும்போது அறிவு மறந்துவிடும்.  அப்போது நீ எனக்கு முன்னால் வரவேண்டும் என்று வேண்டுகின்றார்.  திருவருள் துணை இருந்தால் மட்டுமே இறை உணர்வுடன் இருந்து இறைநினைவு பெறமுடியும்.  அதனால் அபிராமி தன் முன்னால் வந்து நிற்பதற்கு அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் என்கின்றார்.


நாளும்
நினைக்கும் பயிற்சி பெற்றவர்களால் மட்டுமே சாநாளும், வாநாளும் அறியும் பக்குவம் வரும். அதனால் நீ நாளும் நினை கண்டாய்.  நாளும் இறைவனை நினைக்கும் நெஞ்சம் நந்நெஞ்சமாகும். அந்நெஞ்சே எமனை வென்றிருக்கும்.


Mind Control - மனத்தை அடக்குவது எப்படி?


மனத்தை அடக்குவது எப்படி


     ஊனில் ஆவி உயிர்க்கும்போது எல்லாம் இறைவனை நாடவேண்டும். ஒவ்வொரு உட்சுவாசமும் இறைவன் நாமத்தை நெஞ்சில் இருத்தித் தாலாட்ட வேண்டும். ஊஞ்சல் போகும்போதும் ,  வரும்போதும் அசைந்து கொண்டிருப்பது போல் நாம் உள்விடும் மூச்சும் வெளிவிடும் மூச்சும் இறை நாமத்தையும் இறை உணர்வையும் சுமந்துகொண்டே இருக்கவேண்டும்.

அரும்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும்
  அருமருந்தை அகல் ஞாலத்து அகத்துள் தோன்றி
 வரும்துணையும் சுற்றமும் பற்றும் விட்டு
  வான்புலன்கள் அகத்து அடக்கி மடவாரோடும்
 பொருந்தணைமேல் வரும் பயனைப் போக மாற்றிப்
 பொதுநீக்கித் தனை நினையவல்லார்க்கு என்றும்
 பெரும்துணையைப் பெரும்பற்றப் புலியூரானைப்
  பேசாத நாள் எல்லாம் பிறவாநாளே      

                                  
                                                                                   (
திருமுறை 6)


     இறைவன் கருணையாளன் என்பது பொதுவிதி.  ஆனால் அப்பரடிகளுக்குச் சிறப்பாக மருத்துவச் சிகிச்சை அளித்தவன் என்பதால் மருத்துவன் என்றும் இறைவனை மருந்து என்றும் சிறப்பித்துக் கூறுகின்றார். அவருக்கு மட்டும் மருந்தாகவும் மருத்துவனாகவும் இருக்கமாட்டான். பொதுநீக்கித் தனை நினையவல்ல அடியவர்கள் அனைவருக்கும் இறைவன் மருந்தாக மருத்துவனாக நிற்பான் என்றும் கூறுகிறார்.

 யோகத்தின் பொலிவு


கைப்போது மலர்தூவிக் காதலித்து வானோர்கள்
 முப்போதும் முடிசாய்த்துத் தொழநின்ற முதல்வனை
 அப்போது மலர்தூவி ஐம்புலனும் அகத்தடக்கி
   எப்போதும் இனியானை என் மனத்தே வைத்தேனே   


                      
                                                                                                  (
திருமுறை 4)


     மனம் என்பது கண்ணுக்குப் புலப்படாத ஒரு பொருள்.  இதுவரை மனம் என்ற பொருள் எங்கே உள்ளது என்று எந்த விஞ்ஞானியும் கண்டு பிடிக்கவில்லை. ஆனால் அந்த மனம் என்ன பாடுபடுத்தும் என்பதை நம் மெய்ஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.


மனம் எனும் ஒரு பேய்க் குரங்கே
                                  (அருட்பா)
 

     குரங்கு அங்கும் இங்கும் அலையக்கூடியது. சாதாரணக் குரங்கின் ஆட்டமே தாங்கமுடியாது. அதிலும் அக்குரங்கிற்குப் பேய் பிடித்தால் எப்படி இருக்கும்.  அத்துடன் அப்பேய்க்; குரங்கு இஞ்சியும் தின்றதாம்; அக்குரங்கை தேளும் கொட்டியதாம். இந்தச் சூழலில் அக்குரங்கு என்ன ஆட்டம் ஆடும் என்று அருளாளர்கள் மனத்தின் இயல்பை வர்ணிக்கின்றார்கள்.  இப்படி ஆடும் மனத்தை அடக்குவது எப்படி? என்பதை அப்பரடிகள் நமக்கு விளங்குகின்றார். சரியை நெறியில் நின்று,


புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்குமிட்டுப்
 பூமாலை புனைந்து ஏத்திப் புகழ்ந்துபாடி    


                              
         (
திருமுறை 4)


     தொண்டு செய்தால் மனம் அடங்கும். யான் எனது என்னும் கொட்டம் தணியும். தாழ்வு எனும் பணிவு வந்தால் விலங்கியல் விகாரப்பாடு குறையும் என்று அறிவுறுத்துகின்றார். புலர்வதன்முன் அலகிடும்போதும் மெழுகிடும்போதும் கை ஒன்று செய்ய வாய் ஒன்று பேச, காது ஒன்று கேட்கும் படியாகத் தொண்டு செய்தால் நாம் நினைக்கும் பலனைஎதிர்பார்க்கும் பலனை அடையமுடியாதுஅதனால் ஐம்புலனும் அகத்து அடக்கும் யோகநிலையில் நில்லுங்கள் என்கின்றார்.

     அடியவர்களின் அரும் துணை சிவபெருமான்அடியார்கள் அல்லல் தீர்;ப்பவன் சிவபெருமான்.  செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள் பின்னலிட்டுக் கொண்டு தாய் என்றும்;சேய் என்றும்;நீ என்றும்;நான் என்றும் சுற்றித் திரியவிடாமல் நம்மை ஆண்டு அருள் புரிபவன் சிவபெருமான். வான் புலன்கள் அகத்து அடக்குவதற்குப் பயிற்சி அளிப்பவனும் அவனே. வாயாரத் தன் அடிபேணும் தொண்டர் மனத்தில் இருப்பவனும் அவனே. அதனால் தொண்டு செய்தால் அவனே அதைத் தூய நெறியாக்கி அதன்மூலம் சரியை கிரியை யோகம் ஞானம் என்று ஒவ்வொரு அனுபவத்தையும் தந்து அதற்கும் மேலாகத் தன்னையே தருபவன்

நிலைத்த இன்பமாக எப்போதும் இனியானை என் மனத்தே வைத்தேனே’ என்று மனத்தில் இன்பமாக அமர்ந்திருப்பவன். பெரும் துணையும் வரும் துணையும் தனித்துணையுமான பரம்பொருளை அகத்து அடக்கும் யோக நிலையினைப் பயிற்றுவித்தான் இறைவன்.


7 November 2018

Beacon - தூண்டுசுடர்


தூண்டுசுடர்

     அப்பர் சுவாமிகள் இறைவனைப் பற்றி மட்டும் பாடவில்லை. இறைவன் என்றால் ,   இன்றைய மக்கள் அறிந்து வைத்துள்ள செய்திகளுக்கும், திருநாவுக்கரசர் காட்டும் இறைவனுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது.  இன்றைய சமுதாயம் இறைவன் என்றால் பிரதோசத்தன்று கோவில் செல்வது; , நவக்கிரங்களின் பெயர்ச்;சியின் காரணமாகத் தனக்கு ஏதோ கெடுதி வரப்போகின்றது என்பதைச் செய்தித்தாள் மூலமாகவோ, சோதிடர் மூலமாகவோ தெரிந்து வைத்துக்கொண்டு, அதற்கான பரிகாரங்களையும் தெரிந்துகொண்டு அதன் அடிப்படையில் அவர்கள் கூறும் நாட்களில் திருக்கோவிலிற்குச் சென்று வருவதுதான் நாம் அறிந்துள்ள பக்தி. நமக்குத் தெரிந்த இறை வழிபாட்டு முறையும் இறைவனைப் பற்றிய அறிவும் கூட அவ்வளவே.


     இவற்றை எல்லாமும் தாண்டி மக்கள் மீதுள்ள இரக்கத்தால் கற்றுணர்ந்த பெரியவர்கள் யாரேனும் திருக்கோவில் வளாகத்தினுள் இருந்து தேவாரம் பற்றியோ, திருவாசகம் பற்றியோ ஏதேனும் நல்ல செய்திகள், நல்ல கருத்துக்கள் தெரிவிப்பதாக இருந்தாலும் நாமும் அவருக்கு எவ்வளவு நெருக்கமாக அருகே உட்கார்ந்து கொண்டு நாட்டு நடப்பு பற்றியும், ஏதோ நாளைக்கு நாம்தான் . நா. சபையில் கருத்தரங்கு ஆய்வுக்கட்டுரை தாக்கல் செய்வது போலவும் பேசிக்கொண்டிருப்போம்.  இதுதான் சமயத்தைப் பற்றிய நமது அறிவு.


நான் உரைக்கும் வார்த்தையெலாம் நாயகன் தன் வார்த்தை
நம்புமின் நமரங்காள் நற்றருணமிதுவே
 வான் உரைத்த மணிமன்றில் நடம்புரி எம்பெருமான்
     வரவு எதிர்கொண்டு அவனருளால் வரங்கள் எலாம் பெறவே
 தேன் உரைக்கும் உளம் இனிக்க எழுகின்றேன் நீவிர்
தெரிந்து அடைந்து என் உடன் எழுமின் சித்தி பெறலாகும்
 ஏன் உரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்
யான் அடையும் சுகத்தினை நீர் தானடைதல் குறித்தே 

                                                (அருட்பா)

     அருளாளர்கள், அவர்கள் அடைந்த இன்பத்தினையும், அதில் வரும் சுகத்தினையும் நாம் அடைதல் பொருட்டு, இரக்கத்தால் எடுத்துச் சொன்னார்கள். ஆனால் நாம் அதையும் புரிந்துகொள்ள மறுக்கின்றோம்.


     சமய நெறிகளாகட்டும்; , வீட்டு நெறிகளாகட்டும். எதுவாக இருந்தாலும் வழிகாட்டுதல் என்னும் ஒரு வழக்கம் இருந்தால்தான் நாம் அதில் முன்னேற முடியும்.  நாம் அடைய விரும்பும் குறிக்கோளையும் அடையமுடியும். 

தானத்தைச் செய்து வாழ்வான் சலத்துளே அழுந்துகின்றீர்
 வானத்தை வணங்கவேண்டில் வம்மின்கள் வல்லீராகில்
 ஞானத்தை விளக்கை ஏற்றி நாடியுள் விரவவல்லார்
 ஊனத்தை ஒழிப்பர் போலும் ஒற்றியூர் உடையகோவே"                                                                                                                                        (திருமுறை 4)

     உடல் ஊனம், மன ஊனம், உணர்வு ஊனம் தவிர்ப்பதற்கு வாருங்கள் என்று அழைக்கின்றார் அப்பரடிகள். ஊனத்தை நீக்குவதற்கு ஒற்றியூர் அரசன் காத்துள்ளான். வேகமாக வந்து உங்கள் ஊனத்தை தவிர்ப்பதற்குத் தானத்தைச் செய்யுங்கள். ஞானம் என்பது விளக்கேற்றி வெளியில் தேடவேண்டிய ஒன்றல்ல. அக விளக்கேற்றி, ஐம்புலன் அகத்தடக்கித்  தேடவேண்டிய ஒன்று என்று நமக்கு அறிவுறுத்துகின்றார்.



     இறைவனை அடைவதற்கு இறை நாமம் சொல்வதோ, பஜனை செய்வதோ வழி அல்ல. ஏழை, ஏதலன், கீழ்மகன் என்னாது அன்பு செய்யவேண்டும்.  தொண்டுநெறியே தூநெறியாக இருக்கவேண்டும். மனத்துறவே துறவாக இருக்கவேண்டும் என்று கூறுகின்றார்.