திருநாவுக்கரசா் வரலாறு காட்டும் பாடம் - நிறைவுப் பகுதி
“காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையால் கரைநின்றவர்
கண்டுகொள்...”
(திருமுறை 4)
காத்தாள்பவர் காவல் இகழ்ந்துவிட்டார்கள். அதனால் நான் சமணம் குறுகினேன். இதில் என் பங்கு எதுவும் இல்லை. அம்மையாக, அப்பனாக, ஐயனாக, அன்புடைய மாமனாக, மாமியாக இருந்து காவல் செய்யவேண்டிய யாரும் என்னைக் கண்டு கொள்ளவில்லை. குருவாக இருந்து என்னை வழிநடத்த வேண்டியவர்களும், என்னைக் கண்டுகொள் என்று சொல்லவில்லை. ஈசனாக இருந்து நீயும் என்னைக் கண்டு கொள்ளவில்லை. இப்போது என்னிடம் சினம் கொள்வதில் என்ன நியாயம் உள்ளது? நீ உனது கடமையைச் செய்திருக்கவேண்டும் என்று, தானே ஒரு வழக்கறிஞராக இருந்து இறைவனிடம் நீதி கேட்கின்றார் அப்பர் சுவாமிகள்.
மேலும் பெரியவர்களுக்கு என்று ஒரு பொறுப்பு உள்ளது. தன்னைச் சரண் அடைந்தவர்களைக் காப்பதுதான் அப்பெரிய பொறுப்பு. தன்னை அடைந்தார் வினை தீர்ப்பது அன்றோ, தலையாயவர் தம் கடமை. அதைவிடுத்து நான் முன்பு அறியாமல் செய்த தவற்றிற்காக இப்போது தண்டிப்பது எந்த வகையில் நியாயம்? என்று நீதி கேட்கின்றார் அப்பரடிகள்.
சாதாரணமாக உலகியலில் உள்ளவர்கள் எந்தத் தவறு வேண்டுமானாலும் செய்யலாம். அது அவர்களுக்கு எந்த இழுக்கையும் தேடித்தராது. ஆனால் உன்னை உலகத்தவர்கள் அனைவரும் ‘உள்குவார் வினை தீர்க்கும் என்றுரைப்பர்’ அப்படி உள்குவார்கள் வினை தீர்ப்பதாகப் பெயர் மட்டும் வாங்கினால் போதுமா? இவ்வுலகத்தில் நானும் ஒருவன். நானும் உன்னையே நினைந்து உருகுகின்றேன். அப்படி இருக்கும்போது எனது வினைகளை நீ தீர்க்கவில்லையே என வினவுகின்றார் நாவரசர்.
‘தம்மை அடைந்தவர் வினை தீர்ப்பது
தலையாயவர் தம் கடமை’
என்னும் உலக வழக்கிற்குப் பங்கம் வந்துவிடும் என்று இறைவனிடமே நீதி கேட்கின்றார்.
இன்னும் ஒருபடிமேலே போய், நீ அப்படிக் காவாது விட்டுவிட்டால் யாருமே உன்னை நம்ப மாட்டார்கள். இவ்வளவுதானா அடியவர்கள் படுவது? அடியவர்கள் என்றால் இறைவன் அவர்களுக்கு வேண்டிய மனநிறைவையும், இறை உணர்வையும் தந்திருப்பான் என்ற நினைத்து வந்தால், இது என்ன மோசம். அப்பரடிகள் போன்ற அடியவர்களே இப்படித் துன்பப்படுகிறார்களே! என்று யாருமே உன்பக்கம் வரமாட்டார்கள் என்று கூறுகின்றார்.
இன்னும் ஒருபடி மேலே போகின்றார். அன்று நான் இராவணனுக்கு உளவு சொன்னேன். தவறு செய்ததற்காக மீண்டும் பூமியில் வந்து பிறந்து, தாய் இழந்து, தந்தை இழந்து, தமக்கையைக் குருவாக அடைந்து உன்னை அடையும்பேறு பெற்றேன். உனது கூற்றான எனது தண்டனையை நீ விலக்கினால்தானே நான் பிறவி நீக்கம் பெறுவேன். உனது கூற்று என்ன? வயிற்றுவலி கூற்றாக வந்து வதைக்கின்றது. ஆனால் அந்தக் கூற்றுவனுக்கு நான்; பயம் கொள்ளவில்லை. உன்னுடைய ஆணையின் பேரில் முன்னம் முனியாக வாழ்ந்தவன். இப்போது வாகீசனாகப் பிறந்துள்ளேன். அந்தக் கூற்றை (அந்த ஆணையை) விலக்கு என்று வாதிடுகின்றார். அரச ஆணை கேட்டே அச்சப்படாத திருநாவுக்கரசர் வயிற்றுவலிக்கா அச்சப்படப் போகின்றார்.
கொலைவரி வேங்கை வந்தாலும் பயமில்லை. பொய் மாயப் பெருங்கடலில் புலம்பாநின்ற புண்ணியத்திற்கும், தீவினைக்கும் பயமில்லை. உனது வார்த்தையை மாற்றித் தரவேண்டும். உனது அடியவர் கூட்டில் சேர்த்துத் தரவேண்டும் என விரும்புகின்றார் அப்பரடிகள்.