திருநாவுக்கரசா் வரலாறு காட்டும் பாடம்
திருநாவுக்கரசருக்கு முன்பிறவிக் கதை ஒன்று கூறப்படுகின்றது. பெரிய புராணத்திலும் அதற்கான குறிப்புகள் உள்ளது.
“திருநாவுக்கரசு
வளர் திருத்தொண்டின் நெறிவாழ
வருஞானத் தவமுனிவர் வாகீசர்” (பெரியபுராணம்)
திருநாவுக்கரசர் வரலாறு துவங்கும்போதே வருஞானத் தவமுனிவர் வாகீசர் என்று துவங்குகின்றார். திருநாவுக்கரசர் சமணம் சார்ந்தபோது தமக்கை திலகவதியார் மனம் உடைந்து இறைவனிடம் தம் வாழ்நாள் உள்ளபோதே தம்பியார் சைவ சமயம் திரும்பவேண்டும் என்று வேண்டுகின்றார்.
“பண்டு புரி நல்தவத்துப் பழுதின் அளவு இறைவழுவும் தொண்டர்”
(பெரியபுராணம்)
திருநாவுக்கரசர் வாகீச முனிவர் என்னும் பெயரால் நற்றவம் செய்து கொண்டிருக்கின்றார். அதில் பழுது சிறிதளவு இருந்ததால் அந்தக் குற்றம் நீங்குவதற்காக மீண்டும் பிறக்கின்றார்.
சுந்தரரது முற்பிறப்பு பற்றி விரிவாகக் கூறுகின்றார் சேக்கிழார் சுவாமிகள்.
“போதுவார் அவர் மேல்மனம் போக்கிடக்
காதல் மாதரும் காட்சி எண்ணினார்” (பெரியபுராணம்)
“முன்பு நீ நமக்குத் தொண்டன் முன்னிய வேட்கை கூறப்
பின்பு நம் ஏவலாலே பிறந்தனை மண்ணின் மீது”
(பெரியபுராணம்)
சுந்தரர் கமலினி அநிந்திதை மேல்கொண்ட காதலால் மண்ணின் மீது பிறந்தார் என்று முற்பிறவித் தொடர்பினைக் கூறுகின்றார்.
ஆனால் திருநாவுக்கரசர் வரலாற்றில் அப்படி ஏதும் கூறவில்லையாயினும் முன்னம் வாகீச முனியாக இருந்ததும், சிறிது பிழையால் மண்ணின் மீது வந்ததும் தெரிகின்றது.
ஒவ்வொரு பதிகத்திலும் கடைசிப் பாடலில் இராவணேஸ்வரனை நினைவுகூர்ந்து பாடுகின்றார். எல்லாப் பதிகங்களிலும் இராவணன் நினைவு வருவதற்குக் காரணம் ‘களவு செய்வோருக்கு உளவு சொன்னேனோ’ என்னும் குற்ற உணர்வுதான் என்பார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இராவணன் சிறந்த சிவபக்தன். சாமகானத்தை இசையுடன் பாடுபவன். முப்பத்து முக்கோடி வாழ்நாள் வரம் பெற்றவன். ஆனால் கல்வி என்னும் பல்கடலும்; செல்வம் என்னும் அல்லலும் பிழைக்கவில்லை. வெளிப்பகைவர்களை வெற்றி கொள்வதில் தன் காலத்தைச் செலவிட்டானே தவிர, தனது அகப்பகையை வெல்லுவது எப்படி? என்பது பற்றிச் சிந்திக்கவில்லை.
... தொடரும்
No comments:
Post a Comment