முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
சிலப்பதிகாரம் என்பது ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று. அதில் காப்பியத்
தலைவன் கோவலன், நாடு விட்டு நாடு பிழைக்க வருகின்றான்.
கண்ணகியும் உடன் வருகிறாள். கணவனும், மனைவியும் மதுரைக்கு வருகிறார்கள். அங்கு பிழைப்புக்காக கண்ணகியின் கால் சிலம்பை விற்க எடுத்துச் செல்கிறான் கோவலன். கடைவீதிக்குச் சென்ற கோவலன் கையில் உள்ளது அரசியின் கால்சிலம்பு என்று அரசனை நம்ப வைக்கிறான்
அரண்மனைப் பொற்கொல்லன்.
உண்மை அறியாத அரசன் கோவலனைக் கொலை செய்யும்படி உத்தரவிடுகின்றான்.
கண்ணகி கோவலனைப் பிரிந்து வாடுகிறாள். மணிமேகலை கோவலனின் மகள். மாதவி, கோவலனின் இரண்டாவது மனைவி. அவளது மகளே மணிமேகலை. மணிமேகலா தெய்வம் என்னும் குலதெய்வத்தின் அருளால் துறவுநெறி மேற்கொள்கின்றாள்
மணிமேகலை. குலதெய்வம் மணிமேகலைக்கு அஷ்டமா சித்தியை அருளியது. தனது தந்தை இறந்ததற்கும், தாய் பரிதவிப்பதற்கும்
என்ன காரணம் என்று குலதெய்வத்திடம்
வினவுகின்றாள் மணிமேகலை. குலதெய்வம் அதற்கான காரணங்களைக் கூறுகின்றது.
முன்னொரு காலத்தில் உறையூர், துறையூர் என இரு சிற்றூர்கள்
சோழ வளநாட்டில் இருந்தன. இரு சிற்றரசர்களும்
ஒருவருக்கொருவர்
பகைமை பூண்டு இருந்தனர். அப்போது ஒரு சேலை வியாபாரி உறையூரில் இருந்து காவிரி ஆற்றின் வழியாக வந்து துறையூரில் சேலை விற்றுச் செல்வார். ஒருநாள் அப்படி அவர் சேலை விற்கவரும் போது உறையூர் வியாபாரியை ஒற்றன் என நினைத்து அரச தண்டனைக்கு ஆளாக்கிவிட்டான் ஒரு அரசு அதிகாரி. சேலை வியாபாரியின் மனைவி கணவனைக் காணாது தவித்தாள்.
நாற்பது நாட்கள் தவம் இருந்தாள் கணவனைப் பிரிந்த மனைவி. அவளது தவத்தின் விளைவாகத் திருவருள் அவளது கணவன் வஞ்சனையால் கொல்லப்பட்டதை உணர்த்தியது. அதையறிந்த அப் பெண் எனது கணவர் எப்படி வஞ்சனையால் கொல்லப்பட்டாரோ, அப்படியே அவரது கொலைக்கு காரணமான அவனும் வஞ்சனையால் கொல்லப்படவேண்டும்
என்று சாபம் விட்டு விட்டு இறந்துவிட்டாள்.
அதன் விளைவாகத்தான் கடந்த பிறவியில் அரசு அதிகாரியாக இருந்த கோவலன் இந்தப் பிறவியில் வஞ்சனையால் கொல்லப்பட்டான் என்பதை உணர்த்தியது மணிமேகலா
தெய்வம்.
ஒவ்வொரு செயலுக்கும் பக்க விளைவும் பின் விளைவும் உள்ளது என்னும் நியூட்டனின் விதி இங்கு செயல் வடிவம் பெற்றுள்ளது. இதை மணிமேகலா தெய்வம் மணிமேகலைக்கு உணர்த்துவதன் மூலம் நாமும் உணர்ந்து கொள்கிறோம்.
தங்குவதற்கு ஒரு வீடும், உண்பதற்கு உணவும், உடுப்பதற்கு உடையும் அளித்த இயற்கைக்கு நன்றி கூறினால் நினைத்தபோது நினைத்த இடத்திற்கு சென்று வரலாம். வினைக் கோட்பாடு பற்றி அறியாமல், சொத்துக் குவித்தால், உணவிற்கு வரிசையில் நின்று தட்டேந்தி நிற்கும் நிலையே எஞ்சும். சிந்திப்போம்! செயல்படுவோம்!!