18 September 2018

Five Inner enemies - திளைத்து நின்று ஆடுதல்


திளைத்து நின்று ஆடுதல்




அன்பும் , அருளும் நம்மை வழிநடத்தினால் நாம் மேலான நெறியினை அடையலாம்.  தெளிந்த ஞானமும் , சீரிய வாழ்வும் வேண்டுவோர் சிந்தனையைத் திருந்த வைத்துச் சிந்திக்கவேண்டும் என்று அறிவுறுத்துகின்றார் அப்பா் சுவாமிகள்.


ஆமைக்கறியினைச் சமைக்கவேண்டுமானால்  ஆமை ஓட்டைத் தனியாகப் பிரித்து எடுக்கவேண்டும். ஆமை ஓட்டைத் தனியாகப் பிரிப்பதற்கு அடுப்பில் ஒரு பானையில் நீரை ஊற்றி  நீருக்குள் ஆமையைத் தூக்கிப் போட்டு சூடு ஏற்றுவார்கள். குளிர்ந்த நீரில் வாழ்ந்த ஆமைக்கு உலைநீர் சூடானவுடன் ,  இளம் சூடான நீர் உடல் சுகத்தைத் தரும்.

     உடனே ஆமை திளைக்கும்; ,  பிறகு நிற்கும், பிறகு ஆடும். ஆமை அறிவில்லாத பிராணி என்று நாம் நினைக்கக்கூடாது. அறிவில்லாத பிராணியாக இருந்தால் இளம்சூடான நீரில் மகிழ்ந்து சுகம் அனுபவித்து,  திளைத்து நின்று ஆடாது. முதலில் இளம் சூடு சுகமாக இருந்தது என்று திளைத்ததுஒரு வேளை திளைத்தால் எங்கே சுகம் குறைந்து விடுமோ என நினைத்து நின்றதுநின்றால் சுகம் குறையுமோ என்று ஆடியது.

     இதுவரை செய்த செயல்கள் எல்லாம் அறிவில்லாத செயல் என்று கூறமுடியாது. உலைநீர் சூடு ஏறியதும் அதில் குளிர்காய்வது ஓர் இன்பம் என்று நினைத்தது. அந்த இன்பத்தை நினைத்து மகிழ்ந்தது.  ஆனால் இந்த இன்பம் நிலைத்து நிற்குமா? என்று யோசிக்கவில்லை.  குளிர்ந்த நீர் சூடாகியது. சூடான நீர் மீண்டும் சூடானால் இந்த உடல் அழியுமே என்னும் சிந்தனை வரவில்லை.  மனிதன் அத்தனையும் சிந்திக்கத் தெரிந்தவன்.


     அன்பு வளைத்து நின்றால் நாம் நன்நெறியில் வாழலாம். அருள் வளைத்து நின்றால் எந்நாளும் நிலைத்த இன்பமே வரும் துன்பம் இல்லை.  ஆனால் நம்மை கள்வர் ஐவர் வளைத்து நிற்கின்றார்கள். இதிலிருந்து விடுதலை பெறுவது எப்போது? என்று சிந்திக்கின்றார்.  நம்மையும் சிந்திக்க வைக்கின்றார்.


வளைத்து நின்று ஐவர் கள்வர் வந்து எனை நடுக்கம் செய்யத்
 தளைத்து வைத்து உலையை ஏற்றித் தழல் எரி மடுத்த நீரில்
 திளைத்து நின்றாடுகின்ற ஆமைபோல் தெளிவிலாதேன்
 இளைத்து நின்றாடுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே    
                                           (திருமுறை 4)

     பொறி , புலன் வசம் நில்லாமல் இறைவசம் நிற்பதற்கு இறைவனை நாம் வளைத்து நின்று ஆடவேண்டும்இறையுணா்வை வளைத்து நின்று ஆடவேண்டும் என்பது அப்பரின் வழிகாட்டு.

10 September 2018

Idaimarutheesan - இனியன் இடைமருதீசன்


இனியன் இடைமருதீசன்


கனியினும் கட்டிபட்ட கரும்பினும்
 பனிமலர்க் குழல் பாவை நல்லாரினும்
 தனிமுடிக் கவித்தாளும் அரசினும்
இனியன்தன்அடைந்தார்க்கு இடைமருதனே                                                                                                                              (திருமுறை 5)


     இடைமருதீசனைத் தனது உணர்வில் அனுபவித்து மகிழ்கின்றார் அப்பரடிகள். அவர் அனுபவித்த அந்த அனுபவத்தை நமக்கும் தெளிவாகக் கொடுக்கவேண்டும் என்று நினைக்கின்றார்.  இறைவன் எப்படி இருப்பான்;  அவனை நமக்கு எப்படி அறிமுகம் செய்வது; மனித உயிர் மட்டுமல்ல; உலகில் தோன்றிய அனைத்து உயிர்களும் தம் தமக்குரிய இன்பம் எது? என்று தாமே தேர்வு செய்து கொள்கின்றன. மனித உயிர் எந்த இன்பத்தை விரும்புகின்றது என்பதை நினைக்கின்றார். தொண்ணூறு விழுக்காடு மனிதர்கள் இனிமையான அனுபவத்தைத்தான் விரும்புகின்றனர்.  அதனால் கனியிலும் இனியன் இடைமருதன் என்றார்.

     கனி ஒரு காலம் கிடைக்கும்; ஒருகாலம் கிடைக்காது. பருவகாலத்தில் மட்டும்தானே மாம்பழம் போன்ற பழங்கள் பழுக்கும். இறைவன் பருவ காலங்களில் மட்டும் கிடைக்கக்கூடியவனா? என்னும் நினைவு வருகின்றது. கட்டிப்பட்ட கரும்பினும் (கற்கண்டு) இனியன் என்றார். கற்கண்டு எக்காலத்திலும் கிடைக்கும். எந்தப் பக்கம் சுவைத்தாலும் இனிமை ஒன்றுபோல் இருக்கும். அதனால் கட்டிபட்ட கரும்பினும் இனியன் என்றார்.  பின்னும் மனநிறைவு பெறவில்லை.


கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றுஅறியும் ஐம்புலனும்
 ஒண்தொடி கண்ணே உள                           
                                           (குறள்)


     ஐந்து புலன்களுக்கும் ஒருசேர இன்பம் தருவது ஒண்தொடியார் தானே.  கனியும் கட்டிப்பட்ட கரும்பும் நாவிற்கு மட்டும்தானே சுவைதரும். அதனால் இறைவனைப் பனிமலர்க்குழல் நல்லாரினும் இனியன். பனிமலர்க் குழலால்தான் ஐம்புலன் நுகர்ச்சிக்கும் ஊற்று என்று அவ்வாறு சொன்னார். ஆனாலும் மனநிறைவு பெறவில்லை. அரச பதவி என்று உயரிய பதவியை விரும்புகிறவர்கள் இவைகளுக்கு எல்லாம் மசிய மாட்டார்களே. அதனால் தனிமுடி கவித்தாளும் அரசினும் இனியன் என்றார்.

     அறுசுவை உணவு உண்பவர்களுக்கு இறைவனைக் காட்ட நினைத்த அப்பரடிகள் நாவின் சுவையை விட இனியன் என்றார். காமச்சுவையை அனுபவிப்பதில் நிறைவு பெரும் மனிதர்களிடம் இறைவனைக் காட்ட நினைத்தவர் பனிமலர்க்குழல் நல்லாரினும் இனியன் என்றார். அரச போகத்தையும் பதவி பட்டத்தையும் விரும்பும் மக்களுக்கு இறைவனைக் காட்ட தனிமுடி கவித்தாளும் அரசினும் இனியன் என்றார். அவன் யாவரினும் இனியன். எல்லாவற்றிற்கும் மேலான இனியன்; கண்ணிற்கு இனியன்;  சிந்தைக்கு இனியன்; எண்ணுதற்கு இனியன்; சொல்லுவதற்கு இனியன் என்று நம்மையும் அந்த இனியனிடம் அழைத்துச் செல்கின்றார்.