28 March 2019

Sundarar's marriage - சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருமணம்


சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருமணம்




போகம் அறுத்தால்; முத்தி தருவன் சிவபெருமான் என்ற நினைப்பை மாற்றி இகபோகத்துடன், சிவபோதத்தையும் தருவான் சிவபெருமான் என்று உறுதி கூறும் புராணம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் புராணமாகும்.  இல்லறத்தில் உள்ளவர்கள் இறை அனுபவம் அடையவோ, முக்தி பெறவோ இயலாது என்று கூறும் அறியாமையை உடைத்து , நினைந்துருகும் அடியவர்கட்காக இறைவன் தூதும் செல்வான் என்று உறுதி கூறும் வரலாறுதான் சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு.  சங்கிலி நாச்சியாரிடம் சென்று சிவபெருமான் சுந்தரரின் பெருமையை கூறுகின்றார்.

"திருவெண்ணெய் நல்லூரில் பல்லோரும் அறியும் படியாக தடுத்தாட் கொள்ளப்பட்ட தொண்டன் சுந்தரன்;.  அவன் என் பால் அன்புடையவன்.  உன்னை அடையவேண்டும் என்று என்னை வேண்டினான். அதனால் நீ அவனை மகிழ்வுடன் திருமணம் செய்துகொள்" என்று அறிவுரை கூறினார் சுந்தரர்.  


மகிழ மரமும் ,  சபதமும்

     சிவபெருமானே தன்னிடம் வந்து சுந்தரர் பெருமை கூறியதைக் கேட்ட சங்கிலியார் மனம் நிறைவு கொண்டார்.  தேவரீரால் ஆட்கொள்ளப்பட்ட சிவத் தொண்டருக்கு மனைவி ஆவதற்கு உடன்படுகின்றேன் என்று கூறினார்.  அத்துடன் திருவாரூரில் அவர் மகிழ்ச்சியுடன் இருந்தவர். இங்கு என்னையும் மணம்புரிந்து கொண்டு என்னோடு எப்படி வாழ்வார்? என்று கேட்டார்; சங்கிலி நாச்சியார்.  சுந்தரன் உன்னைப் பிரிந்து போகேன் எனச் சபதம் செய்து தருவான்.  அதன்பிறகு நீ அவனை மணந்து கொள்ளலாம் என்று கூறி அருளினார்.


     "சங்கிலியிடம் உனது கருத்தினைத் தெரிவித்தோம்.  உம்மை மணம் புரிந்து கொள்ளுமாறும் கூறினோம். சங்கிலியாரும் தம்மைப் பிரியாமலிருக்க ஒரு சபதம் செய்தால் இதற்கு உடன்படுவதாகக் கூறினார்" என்றார் சிவபெருமான்.


     சங்கிலியைத் திருமணம் செய்யும்பொருட்டுத் தாங்கள் சிவலிங்கத் திருமேனியில் விளங்கித் தோன்றாமல் , மகிழ மரத்தடியில் இருக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்தார் சுந்தரர்.  இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்தவன். பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி என்றும்; பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந்தவன் என்றும் மெஞ்ஞானிகள் அனுபவித்து மகிழ்கிறார்கள். எங்கும் நீக்கமற நிறைந்திருப்பினும் தன் அன்பர்களுக்காக இறைவன் சிற்சில திருவிளையாடல்களைச் செய்து அருள்புரிகின்றான். 


     ஒரு முகூர்த்த காலம் சிவலிங்கத் திருமேனியை விட்டு மகிழ மரத்தடியில் இருப்பதாகவும், அந்தநேரம் சங்கிலிக்குச் சபதம் செய்துகொடுத்து விட்டுத் திருமணம் புரிந்து கொள்ளுமாறும் அருள் செய்தார் சிவபெருமான்.  சுந்தரர் மனம் மகிழ்ந்து இறைவன் கருணையை வியந்து நிம்மதியானார்.

அலகிலா விளையாட்டு


     சிவபெருமான் அலகிலா விளையாட்டுடையவன். அவன் ஆட்கொண்டு அருளும் விளையாட்டில் உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்து உய்தி பெறுகிறார்கள்.  சங்கிலியார் கனவில் தோன்றி நம் தொண்டன் சபதம் செய்து தர இசைந்துள்ளான். ஆனால் திருக்கோயில் இலிங்கத் திருமேனியின் முன் சபதம் செய்ய வந்தால் , அதை மறுத்து மகிழ மரத்தின் கீழ் சபதம் செய்து தருமாறு கேட்டுத் திருமணம் செய்துகொள் என்று கூறிப்போந்தார் சிவபெருமான்.  


     சங்கிலியார் மனம் மகிழ்ந்தார். இறைவன் தனக்காக இரங்கி அருளும் கருணையை என்னவென்று சொல்வது என நினைந்து நினைந்து உருகினார். 

இத்தனையும் என்பரமோ ஐய, ஐயோ! எம்பெருமான்
 திருக்கருணை இருந்தவாறே” 

                                                                                             (அப்பர் சுவாமிகள்)

என்று பரமனின் கருணைத் திறத்தை நினைத்துப் பரவசமானார்.  என்னையும் ஒரு பொருட்டாக்கி அடிமை கொண்டாரே என்று எண்ணி மகிழ்ந்தார்.  தனது தோழியரிடம் ,  தான் கண்ட கனவினைச் சொன்னார். இதுவரை ஆண்டு அருள்புரிந்த அண்ணலே மீண்டும் கருணை செய்யவேண்டும் என்று அனைவரும் தொழுதனர்.

     திருப்பள்ளி எழுச்சிக்கு மாலைகள் தொடுத்து எடுத்துக்கொண்டும், இறைவனின் அருளை நினைத்துக்கொண்டும் தோழியர் புடைசூழ திருக்கோவில் சென்றார்.  தம்பிரான் தோழரும் திருக்கோவில் வந்தார். இறைவன் கருணையைச் சங்கிலியாரிடம் எடுத்துக் கூறினார்.  சங்கிலியாரும் உடன்பட்டுத் திருக்கோவில் உள்ளே சென்றார்.

     சுந்தரரும் சங்கிலியாருடன் சென்றார்.  நாம் உம்மைப் பிரியோம் என்று சத்தியம் செய்து உறுதி அளிக்கின்றோம்.  அதனால் சிவ மூர்த்தமாகிய இலிங்கத் திருமேனி முன் வருக என்று சங்கிலி நாச்சியாரை அழைத்தார் சுந்தரர்.   சங்கிலியாரின் தோழியர்கள் சுந்தரரைப் பணிந்து வணங்கினார்கள். சங்கிலியார் கண்ட கனவை நினைத்துக்கொண்டு சுவாமி , தாங்கள் இறைவன் முன் சத்தியம் செய்வது தகாது என்றார்கள்.

     இறைவன் செய்த நாடகத்தை அறியாத சுந்தரர் தோழிப் பெண்களிடம் யான் எங்கு சென்று சத்தியம் செய்யவேண்டும் கூறுங்கள் அங்கு வருகின்றேன் என்றார்.  மகிழ மரத்தின் அடியில் சபதம் செய்தால் போதுமானது.  அங்கே வாருங்கள் என்று அழைத்தனர் சேடியர்கள்.  செய்வது அறியாது திகைத்தார் சுந்தரர். இதனை மறுத்தால் திருமணம் தடைப்படும் என்று நினைத்தார்.  "இறைவன் விட்ட வழி" , என்று மனத்தைத் திடப்படுத்திக் கொண்ட சுந்தரர் மகிழ மரத்தடியில் சென்று சபதம் செய்தார்.  மகிழ மரத்தை மும்முறை வலம் வந்து, "உன்னை யான் பிரியேன்" என்று உறுதி கூறினார்.


     சுந்தரர் சபதம் செய்தபின் எழுத்தறியும் பெருமானை வணங்கி ஏத்தினார்.  இதுவும் உனது திருவுள்ளச் சம்மதமா? என்று எண்ணினார். சங்கிலியாரும் இறைவனைத் தொழுது தனது மலர்த்தொண்டினைச் செய்வதற்குக் கன்னிமாடம் சென்றார்.


     இறைவன் அன்றிரவு திருவொற்றியூரில் வாழும் திருத்தொண்டர்கள் கனவில் தோன்றி நம்பி ஆரூரருக்குச் சங்கிலியைத் திருமணம் செய்து கொடுங்கள் என்றார்.  மறுநாள் காலையில் அனைவரும் அறிய சுந்தரருக்கும், சங்கிலியாருக்கும் திருமணம் செய்வித்து மகிழ்ந்தனர் இறையடியவர்கள்.    சீவபோதத்துள்ளும் , சிவபோகத்தை நுகரும் கருணையைச் செய்தார் சிவபெருமான்.


7 March 2019

Companionship with Devotees - அடியவர் கூட்டு


அடியவர் கூட்டு

     சுந்தரமூர்த்தி சுவாமிகள் நாள்தோறும் திருவாரூர் கோவில் சென்று வழிபட்டு வரலானார்.  தம்பிரான் தோழன் என்னும் சிறப்புத் தகுதி பெற்ற சுந்தரரைக் காணப் பக்தர்கள் எல்லா இடங்களிலிருந்தும் வரலாயினர். அவ்வாறு வரும் அடியவர்களுக்கு அமுதூட்ட குண்டையூர்க்கிழார் என்னும் அடியவர் சுந்தரரது வீட்டிற்கு நெல்லும், பருப்பும் இன்னும் பல பொருள்களும் அனுப்பித் தந்தார்.  இதைக்கொண்டு அடியவர்களுக்குத் தவறாமல் அன்னம் பாலித்தார் பரவை நாச்சியார். இவ்வாறு செய்துவரும் நாளில் குண்டையூர்க்கிழாரின் நெற்களஞ்சியத்தில் நெல் குறைந்தது. விளைச்சலும் காலதாமதமானது. அடியவர்களுக்கு அமுதூட்டும் பணிக்கு நெல் கொடுக்க இயலாதே என குண்டையூர்க்கிழார் மிகவும் வருந்;தினார். 

வேண்டுவார் வேண்டுவது ஈவான் கண்டாய் என்று இறைவன் வேண்டுபவர்க்கு வேண்டுவது அருளுபவன்.  குண்டையூர்க்கிழார் தனக்கு என்றுகூட வேண்டியதில்லை. அன்னம் பாலிப்பதற்கு நெல் கொடுக்க முடியவில்லையே என்றுதான் வேண்டினார். கருணைக் கடலான இறைவன் குண்டையூர்க் கிழாரின் வேண்டுதலை உடனே நிறைவேற்றினான்.  குண்டையூர் முழுவதும் நெல் மலையாகக் குவித்துள்ளோம் என்று கூறினார் சிவபெருமான்.


     குண்டையூர்க்கிழார் சுந்தரரிடம் சென்று சிவபெருமான் செய்துள்ள அருட்கருணையை எடுத்து இயம்பினார்.  சுந்தரரும் தனது அடியவர்கள் புடைசூழக் குண்டையூர் சென்றார்.  அங்கு குவிந்துள்ள நெல்மலையைக் கண்டு அடியவர்கள் ஆச்சரியமுற்றனர்.


விச்சது இன்றியே விளைவு செய்குவாய் என்று கணத்துள் அண்டம் கோடி அமைக்கவல்ல பரம்பொருளுக்கு குண்டையூரில் நெல் மலை குவிப்பது ஒன்றும் அரிய செயல் அல்ல என்று அடியவர்கள் புரிந்துகொண்டனர். சுந்தரர் குண்டையூர்க்கு அருகில் உள்ள திருக்கோளிலி என்னும் திருத்தலம் சென்றார்.  அங்கு பரமனிடம் குண்டையூர்க்கிழாரிடம் பெற்ற நெற்குவியல்களை எடுத்துக்கொண்டு செல்வதற்கு ஆள் இல்லை. அதனால் அக்குவியல்களை எடுத்துக்கொண்டு திருவாரூர் செல்வதற்கு நீதான் உதவ வேண்டும் என்று வேண்டினார். திருவருள் தன் பூத கணங்களை அனுப்பி நெல்மலையைத் திருவாரூரில் சேர்த்தது.


     அன்னதானத்திற்குக் கொடுக்கவேண்டும் என்று விரும்பிய குண்டையூர்க் கிழாரின் விருப்பத்தை நிறைவேற்றிய பரமன். அத்துடன் அதை எடுத்துச் சென்று திருவாரூரில் சேர்க்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.  நெல்மலையை முதலிலேயே சுந்தரருக்குக் கொடுத்திருக்கலாம். குண்டையூர்க் கிழாருக்குக் கொடுத்து , அதன்பிறகு அதை மீண்டும் சுந்தரருக்குக் கொடுப்பானேன் என்று ஒரு கேள்வி எழும்.  குண்டையூர்க்கிழார்தான் சுந்தரருக்கு அன்னம் பாலிப்பதற்கான நெல்லை இதுவரை கொடுத்து வந்துள்ளார்.  இப்போதும் குண்டையூர்க்கிழார் , தன்னால் நெல் கொடுக்க இயலவில்லையே என்று மனம் வருந்திச் சிவபெருமானிடம் வேண்டுகின்றார்.  நெற்குவியலைக் குண்டையூரில் குவித்ததால் இறைவனுக்காகவும் இறை அடியவர்களுக்காவும் அன்னதானம் செய்து குண்டையூர்க்கிழார் என்ன பெருமை பெற்றார் என்று நினைக்கும் மக்களுக்கு இறைவனுக்காக, இறையடியவர்களுக்காக வாழும் வாழ்க்கை காலம் கடந்தும் பொன்னேட்டில் பொறிக்கப்படும் என்பதற்கு இது ஒரு சான்றாக அமையும்.


     அடியவரின் கூட்டுறவால் இறைவனை மட்டுமல்ல , உலகியல் போகமும் பெறலாம் என உணா்த்துவது இப்பகுதி.


     சுந்தரருக்கு நேரடியாக இறைவன் கருணை செய்திருந்தால் குண்டையூர்க் கிழார் பெயர் சரித்திரத்தில் இடம் பெற்றிருக்காது.  குண்டையூர்க்கிழார் செய்த தானம் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படவேண்டும் என்று இறைவன் விரும்பினார்.  அதனால் குண்டையூரில் நெல்மலைகளைக் குவித்தார். அங்கிருந்து சுந்தரரின் வேண்டுதலை ஏற்றுத் திருவாரூரில் சேர்த்தார்.