கருவுற்ற நாள் முதலாக
மருத்துவ விஞ்ஞானம் மிகவும் வளர்ந்துவிட்டது. இதன்மூலமாக குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்காக செயற்கைமுறையில் கருத்தரிப்பு செய்து, மகப்பேறு இல்லாத குறையினைச் சீர் செய்கிறார்கள். அவ்வாறு செயற்கைக் கருவூட்டல் மூலமாகக் கருத்தரிப்புச் செய்யும்போது ,தேர்ந்தெடுக்கும் மரபு அணுக்களை மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆற்றல் மிக்க அணுக்களாகவும், குறைபாடுகள் இல்லாத அணுக்களாகவும் தேர்வு செய்துள்ளதாகவும் கூறுகிறார்கள். அதையும் தாண்டி
‘ஆறும் கருவில் அமைந்தபடி’
என்று பெரியோர்கள் கூறுவதுபோல், கல்வி, செல்வம், இளமை, நல் ஊழ் நுகர்ச்சி, மனை, மனைவி இவை கருவுற்ற காலத்திற்கு முன்பே நம் ஊழ்வினையின் அமைப்புப் படி அமைந்து விடுகின்றது.
எத்தனை கவனமாக மரபு அணுக்களைத் தேர்வு செய்தாலும், அதையும் மீறி நம் வினையை அனுபவித்துக் கழிக்கும்படியான ஒரு விதி நமக்கு அமைந்து விடுகின்றது. மருத்துவர்களிடம் இதுபற்றிக் கேட்டால் எங்கள் முயற்சியை நாங்கள் செய்தோம். மற்றவை இறைவன் விட்டவழி என்கின்றனர்.
“பேராயிரம்பரவி வானோர்ஏத்தும் பெம்மானைப்
பிரிவிலா அடியார்க்கு என்றும்
வாராத செல்வம் வருவிப்பானை
மந்திரமும் தந்திரமும் மருந்துமாகி
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத் திண்சிலை கைக்கொண்ட
போரானை புள்ளிருக்கு வே@ரானை
போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே”
(திருமுறை 6)
(திருமுறை 6)
மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித் தீராத நோய் தீர்த்தருள வல்லவன் நமது பவரோக வைத்தியநாதன். அவன் நமது மரபு அணுக்களைச் சீர் செய்யும்போது அதில் தவறு நேராது. முன்னம் வாகீச முனியாக இருந்தார். பிறகு அதே மரபணுவின் வழி சிவநேசச் செல்வராகக் கருவுற்ற காலத்தே ஆண்டுகொண்டார் சிவபெருமான். ஒருமுறை சிவநேசச் செல்வராகத் தேர்வு செய்த மரபணுவில் எந்தக் குறைபாடும் நேரவில்லை. அதனால் சிவனடியாராகப் பிறந்தார். கல்வி எனும் பல்கடல் பிழைக்கவேண்டும். விதண்டாவாதக் கல்வியோ, வாதப் பிரதிவாதங்களை வளர்க்கும் குதர்க்க வாதங்களோ ஒருவனை இறைநிலைக்கு உயர்த்தாது என்பதை உலக மக்களுக்குப் புரிய வைக்கவேண்டும்.
உறுதிப்பாடும் முனைப்பும் இல்லாத மரபணுவாக இருந்தால் மருவிப் பிரிந்துவிடும் அந்த உயிர். மலையே வந்து வீழினும், நிலையில் நின்று கலங்கப் பெறாத உயிரினால் மட்டுமே மேலான நிலையினை அடையமுடியும் என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டும்.
“கருவுற்ற நாள் முதலாக உன்பாதமே காண்பதற்கு
உருகிற்று என்உள்ளமும் நானும் கிடந்து அலைந்து எய்த்தொழிந்தேன்
திருவொற்றியூரா திருவாலவாயா திருவாரூரா
ஒருபற்றிலாமையும்கண்டுஇரங்காய் கச்சிஏகம்பனே”
(திருமுறை 4)
(திருமுறை 4)
கல்வி என்னும் பல்கடல் மீதுள்ள விருப்பத்தால் மாற்றுசமயம் சேர்ந்தாலும், உறுதிப்பாடும் முனைப்பும் உள்ள உயிரால் மட்டுமே பலவிதமான சோதனைகளைத் தாங்கிக் கொள்ளமுடியும் என்பதனை உலகிற்கு உணர்த்த விரும்பினார் இறைவனாகிய பவரோக வைத்தியநாதன்.
அதனால் அப்பரடிகளைத் தேர்வுசெய்தான். கருவுற்ற நாள்முதலாகவே இறைவனுக்கு ஆட்பட்டிருந்த ஆன்மாவால் மட்டுமே சுண்ணாம்புக் காளவாயினை மாசில் வீணையாக மாற்றமுடியும்; , மதம்பிடித்த யானையைக் கண்டு,அஞ்சுவது யாதொன்றுமில்லை; அஞ்ச வருவதுமில்லை என்று கூறமுடியும். இறைவன் திருநாவுக்கரசரின் மரபணுக்களைக் காலம் காலமாகப் பக்தி வலையில் படுமாறு செய்தான்.
No comments:
Post a Comment