அசுரர்கள்
அசுரர்கள் என்றால் தலையில் 2 கொம்புகள்; வாயில் 4 கோரைப் பற்கள் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் என்று நமக்கு நாமே ஒரு கற்பனை செய்து கொள்கின்றோம். ஆனால் அசுரர்கள் அத்தகையவர்கள் அல்லர். யார் மாற்றான் மனைவியை விரும்புகிறார்களோ, யார் அடுத்தவர் பொருளுக்கு ஆசைப் படுகிறார்களோ, யார் அடுத்தவர் வயல் வரப்பையும் வெட்டித் தனதாக ஆக்கிக் கொள்கிறார்களோ, யார் உள் ஒன்று வைத்து, புறம் ஒன்று பேசுகிறார்களோ அவர்கள் அனைவருமே அசுரர்கள்தாம். இவா்களை
‘மரம்போல்வர் மக்கள் பண்பில்லாதவர்’ என்பார் வள்ளுவா்.
மக்கள் பண்பு, சகிப்புத்தன்மை, ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதல், விட்டுக்கொடுத்தல், பிற உயிர்களிடம் அன்பு செலுத்துதல், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் இவை எல்லாம் மனிதப் பண்புகள்.
இதிகாச, புராண காலத்தில் வாழ்ந்த அசுரர்கள் நிறைய தவம் செய்தார்கள். அவர்கள் செய்த தவத்தின் பயனாக அரிய பல வரங்களைப் பெற்றார்கள். பெரிய பதவிகள், பட்டம் இவை தானாகவே வந்து சேர்ந்தது. அவர்கள் தவம் அதிகமாக அதிகமாகக் கிடைத்த பதவியும், பதவியினால் வந்த மோகமும், ஆணவமும் தவத்தின் வலிமையை இழக்க வைத்தது. ஆணவத்தின் காரணமாகத் தாங்கள் பெற்ற தவ வாழ்க்கையையும்; அதன் பயனாக சூரிய சந்திரர்களையும் ஆட்சி செய்தார்கள்.
கிரகங்களை இயற்கைக்கு முரணாக இயங்க
வைத்து அதன்
மூலம் மகிழ்ச்சி அடைந்தார்கள். அவர்கள் நினைத்தால் மட்டுமே காற்று வீசும். சூரியன் பிரகாசிப்பான்; சந்திரன் ஒளிவிடுவான்; சப்த மேகங்களும் மழை பொழியும். தவம் செய்து பெற்ற அரிய வரங்களை, பதவி கிடைத்த ஆணவத்தால் நிலை
தடுமாறி அசுரர்கள் இப்படி இயற்கைக்கு முரணாக
இயற்கையை இயங்க வைத்தனா்.
இன்றைய சமுதாயநிலை
ஆனால் எந்தத் தவமும் செய்யாமல் இன்றைய சமுதாய மக்களைக் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளால் கவர்ந்து பதவிக்கு வரும் அரசியல் தலைவர்கள் பதவி மோகம் தரும் ஆணவத்தால், அவர்கள் நினைத்தால்
தான் காற்று விசிறும் காற்றாடி சுழலும்; கனரக வாகனங்கள் ஓடும்; கனிமங்கள் பழுக்கும்; காடுகள் இருக்கும்; அணைகள் திறக்கும்; இருளில் மூழ்கும் கிராமங்கள் வெளிச்சமாகும். படிக்கும் நேரத்தில் வெளிச்சம் வரும். தவம் செய்யாமல் பதவி மோகம் செய்யும் அரசியல் இது.
அந்த நாளில் சூரபன்மன் என்னும் ஒரு அசுரன் இருந்தான். முருகக்கடவுள் வந்தார். இராவணேஸ்வரன் என்னும் ஒரு அசுரன் இருந்தான் ஸ்ரீராமர் வந்தார். துரியோதனன் என்னும் பேராசைக்காரன் இருந்தான். சகுனி என்னும் குள்ளநரித் தந்திரம் செய்பவன் இருந்தான். ஸ்ரீகிருஷ்ணர் வந்தார். இப்படியாக பிறன் மனை நயத்தல், பிறர்
பொருள் அபகரித்தல், வஞ்சனையால் பிறநாடுகளைக் கவர்தல் என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒவ்வொரு அசுரர்கள் வந்தார்கள். அவர்களிடமிருந்து மக்களை விடுவிப்பதற்கு பரம்பொருள் திரு
அவதாரம் செய்தது.
தற்போது திரும்பிய இடமெல்லாம் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி, தாய் மகனைக் கொல்லுதல், மகன் தாயைக் கொல்லுதல், தகாத உறவுகள் என்று சமுதாயம் மிகவும் சீரழிந்துவிட்டது. எப்போது எல்லாம் தர்மம் நலிந்து அதர்மம் மேலோங்குகின்றதோ அப்போது நான் வருவேன் என்றார் கிருஷ்ணர். ஆனால் தற்போது மலிந்துவிட்ட அதர்மத்திற்கு பரம்பொருள் தனியாக வந்து எதுவும் செய்யவேண்டாம் என்று நினைத்துவிட்டது போலும்! அதனால் இயற்கை அன்னையே காற்றாக, புயலாக, மழையாக, எரிமலையாக, பூகம்பமாக, ஆழிப் பேரலையாக அவதாரம் எடுக்க ஆரம்பித்துவிட்டாள். அது மட்டுமல்ல,
“யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் பல”
(குறள்)
(குறள்)
மக்கள் எந்தச் சாதியின் பெயரால் ஒருவரையொருவர் அடித்துக் கொள்கிறார்களோ, அந்தச் சாதியே அவர்களை அழிக்கும் கருவியாகிவிடுகின்றது. சமயத்தின் பெயரால், கலாச்சாரத்தின் பெயரால், வல்லரசுகளின் பெயரால், ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு மாய்ந்து விடுகிறார்கள். இதற்கெல்லாம் மாற்று வழி என்ன? வள்ளல்பெருமானார் நமக்கு உணர்த்துகின்றார். அன்பின் வழியது உயர்நிலை. எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர்போல் நினைத்து ஒத்து உரிமையுடையவராய் நடக்கவேண்டும் என்று விரும்புகின்றார். அந்த விருப்பம் பாடலாகின்றது.
“அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட்கு எல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்ஙனும் நான் சென்றே
எந்தை நினது அருட்புகழை இயம்பிடல் வேண்டும்
செப்பாத மேல்நிலை மேல் சுத்த சிவமார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான் செய்யினும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவ நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே”
(அருட்பா)
மனித மனம் வளம் பெறவேண்டி வள்ளல்பெருமான் இறைவனிடம் வேண்டுகிறார். புறத்தூய்மை நீரால் அமையும். அகத்தூய்மை அன்பால் அமையும். அன்பு ஒன்றினால் மட்டுமே அமையும். வரப்பு உயர
நீர் உயரும். நீர் உயர
நெல் உயரும். நெல் உயரக் குடி உயரும். குடி உயரக் கோன் உயரும் என்பார்கள். இவைகள் எல்லாம் சீராக நடக்க
வேண்டுமானால் இயற்கை அன்னையின் ஒத்துழைப்பு வேண்டும்.
ஒழுக்கமான சமுதாயத்தில் மட்டுமே இயற்கை அன்னை தனது செங்கோலாட்சியை நடத்துவாள். ஒழுக்கமான சமுதாயம் உருவாக தனி
மனிதன் ஒவ்வொருவனிடமும் மனிதப் பண்பும், மனிதநேயமும் வளரவேண்டும். மனித மனம் வளம்பட்டால்தான் மனிதநேயம் மலரும். மனிதநேயம் மலரவேண்டுமானால் ஜாதியிலே, மதங்களிலே அபிமானித்து அலையக்கூடாது. ஆருயிர்கட்கு எல்லாம் அன்பு செய்யும் பெருநெறி பிடித்து ஒழுகவேண்டும்.
வள்ளல் வழி நின்று நாமும் மனித மனவள மேம்பாடு துறை அமைத்து ஆருயிர்கட்கு எல்லாம் அன்பு செய்ய முயற்சிப்போம். வள்ளல்
பெருமான் மலரடியை வணங்குவோம்! வணங்கி வளருவோம்!