மாணிக்கவாசகரின் காதல்
மாணிக்கவாசகரும் காதல் செய்தார். குதிரை வாங்குவதற்காகச் சென்றவரை இறைவன் தாமே ஆட்கொண்டார்.
தனது தாளில் சேர்த்துக்கொண்டார். அவர் பெற்றுக்கொண்ட திருவடி அனுபவத்தினை வைப்பதற்கு இடமில்லாமல் தவித்துக் கொண்டிருந்தார். அமைச்சராக இருந்தவர் தற்போது அடியவராகிவிட்டார்;. மக்கள் இவரைப் பார்த்து ஏளனம் செய்கிறார்கள். எவ்வளவு பெரிய படிப்பு; எவ்வளவு பெரிய பட்டம்; எவ்வளவு அதிகாரம் இவை எல்லாவற்றையும் துறந்து விட்டு இது என்ன இப்படித் திரிகின்றார்?
அனைவரும் எள்ளி நகையாடுகின்றனர். அந்த எள்ளி நகையாடுதலைப் பொருட்படுத்தாத ஓர் உயரிய ஞானத்தை இறைவன் மாணிக்கவாசகருக்கு அளித்தான். திருப்பெருந்துறையில் தன்னை வலிய ஆட்கொண்ட திருவடியினைத் தான் மீண்டும் அனுபவிக்க வேண்டும் என்பது ஓர் ஆசை. அடியவர் கூட்டில் சேர விரும்புவது ஓர் ஆசை என்று இருவித ஆசைகள் மாணிக்கவாசகருக்கு இருந்தது.
ஊர் ஊராகத் திரிந்து தன் தலைவன் திருவடியினையும் அடியவர் கூட்டத்தையும் தேடுகின்றார்.
அதற்காகக் காதல் செய்தார். காலம் உண்டாகவே காதல் செய்தார். எதிர்பாராத இன்ப அதிர்ச்சி ஒன்று அவருக்குக் காத்திருந்தது.
திருப்பெருந்துறையிலிருந்து புறப்பட்டுத் தேடிக்கொண்டே வந்தார். கடைசியாக திருக்கழுக்குன்றம் வந்தார்.
“பேதம் இல்லது ஓர் கற்பு அளித்த
பெருந்துறைப் பெரு வெள்ளமே
ஏதமே பல பேச நீ எனை
ஏதிலார் முனம் என் செய்தாய்
சாதல் சாதல் பொல்லாமை அற்ற
தனிச் சரண் சரணாம் எனக்
காதலால் உனை ஓத நீ வந்து
காட்டினாய் கழுக்குன்றிலே”
(திருவாசகம்)
பேதம் இல்லது ஓர் கற்பு என்பது ஆன்ம நேயத்தின் ஓர் உன்னத நிலை. இறையருள் பெறவும், இறைவனோடு இரண்டறக் கலக்கவும் விரும்பும் ஆன்மா தனது ஆன்ம பயணத்தின் நிறைவாக அடையவேண்டிய ஓர் பக்குவம். “எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம் உயிர்போல் நினைப்பது”
என்னும் அருள் அனுபவ நிலை. அந்நிலையே பேதம் இல்லாத கற்பு நிலையாகும். அவ்வனுபவம் பெறும் உயிர் பேதம் இல்லாத கற்பு நிலையிலேயே நிற்கும் என்பது அருளாளர்கள் கண்ட உண்மை.
பார்க்கும் இடம் எங்கும் நீக்கமற நிறைந்துள்ள பரிபூரணத்தை உணர்கின்ற ஓர் உணர்வு நிலை அது. அந்த உணர்வு நிலையினைத் திருக்கழுக்குன்றத்தில் அருளுகின்றார் சிவபெருமான்.
அத்துடன் திருவடிப் பேற்றையும் மீண்டும் அளிக்கின்றார்.
திருவடி இவருக்கு என்ன பேற்றை நல்கியது.
“...சாதல் சாதல் பொல்லாமை அற்ற
தனிச் சரண் சரணாம் எனக்
காதலால் உனை ஓத நீ வந்து
காட்டினாய்...”
(திருவாசகம்)
சாதல் என்பது மிகவும் துயர் தரக்கூடியது. பொறி , புலன்கள் கடந்த மகான்களைக் கூட ஒரு கண நேரம் செயல் இழக்கச் செய்யக் கூடியது.
அந்த சாவையும் மாணிக்கவாசகர் வென்றுவிட்டார்.
இவையெல்லாம் எப்படி நடந்தது! ‘காதலால் உனை ஓத’ என்கின்றார்.
இன்றோ என்றோ
காதல் சாதலைத் தவிர்க்கும் என்கிறார் மாணிக்கவாசகர். இறையடியவர்கள் அனைவரும்,
“இன்று வருமோ நாளை வருமோ மற்று
என்று வருமோ துன்று மல வெம்மாயை
அற்றுவெளிக்குள் வெளிகடந்து சும்மா இருக்கும் சுகம்”
(அருட்பா)
என்று இறைவனோடு இரண்டற்ற நிலையில் சுகமாக இருப்பது இன்றைக்கு வருமோ மற்று என்றைக்கு வருமோ என்று இருந்தார்கள். அது அருள்நிலை பெற்றவர்கள் இயல்பு. ஆனால் நமது இயல்பு வேறுவிதமாக உள்ளது. இன்று வருமோ! நாளை வருமோ! மற்று என்று வருமோ மரணம் என்று நாம் தினமும் சாவு ஓலையைக் கண்டு அஞ்சிக் கொண்டிருக்கின்றோம்.
நாம் எடுத்த தேகம் விழுமுன் இன்புறவேண்டுமானால், இறைக்காதல் பெருவெள்ளம் முற்றி, விழுங்கும் அளவு அன்பு செய்யத் தெரிந்துகொள்ள வேண்டும்.
“காலம் உண்டாகவே காதல் செய்து
உய்ம்மின் கருது அரிய
ஞாலம் உண்டானோடு நான்முகன்
வானவர் நண் அரிய
ஆலம் உண்டான் எங்கள் பாண்டிப்
பிரான் தன் அடியவர்க்கு
மூல பண்டாரம் வழங்குகின்றான்
வந்து முந்துமினே”
(திருவாசகம்)
எல்லோருக்கும் நிதி தேவைப்படுகின்றது. நிதி என்பது பொருள் நிதியாக இருக்கலாம் அருள் நிதியாக இருக்கலாம்;
ஆனந்த நிதியாக இருக்கலாம்;
கல்வி நிதியாக இருக்கலாம்.
“எவ்வகை நிதிகளும் இந்த மாநிதியிடம்
அவ்வகை கிடைக்கும் என்று அருளிய நிதியே”
(அருட்பா)
அந்த மா நிதிதான் மூல பண்டாரம்.
காலம் கிடைத்தற்கரியது. இறைவனைக் கால காலன் என்று கூறுவார்கள். மாணிக்கவாசகரும்,
‘காலமே உனை ஓத நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே’
என்றார்.
காலத்தை ஓதவேண்டும்; காதலால் ஓத வேண்டும்; மூல பண்டாரம் வந்து நிதி வழங்குகின்றான்.
அதைப் பெறுவதற்கு ஓத வேண்டும். பேதமில்லாத சமரச சுத்த சன்மார்க்க சங்கத்து அடைவித்து விட ஓதவேண்டும். அண்டத் துரிசையும்,
பிண்டத் துரிசையும் அடித்துச் செல்லக்கூடிய காட்டாற்றுப் பெருவெள்ளம் அதைக் காதலால் ஓதினால் அக் காதல் உயா்ந்த பரம் பெருங் கருணையால் ஆசை தீா்த்தது. உணா்வு தந்தது.
ஒளி ஆக்கியது.
அடியார் அடி கூட்டியது.
அதனால் காதலால் ஓதுவோம்.
காலையே ஓதுவோம்.