ஆயத்த பொருளா அன்பு?
சமுதாயத்தில் இன்று மிகப்பெரிய அளவில் பேசப்படும் ஒரு சொல் காதல் என்பது. ஒரு நாட்டிற்கு, ஒரு இனத்திற்கு, ஒரு மொழிக்கு என்று இல்லாமல் உலகம் தழுவிய பொதுச் சொல் காதல் என்பது. இன்றைக்கு நேற்றைக்கு ஏற்பட்ட ஒரு சொல் அல்ல காதல். காலம் காலமாகப் பேசப்பட்டு வருகிறது இக்காதல்.
காதல் என்பதற்கு என்ன இலக்கணம்? காதல் என்பதற்கு அன்பு, அவா, ஆவல், காமம் என்று பல பொருள் கூறுகிறது அகரமுதலி. காதல் செய்ம்மின் என்றதும் அன்பு செய்யச் சொல்கின்றோம் என்பது புரிகின்றது. அன்பு செய்தல் என்பது என்றால் என்ன? வெளிப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு பொருள் அல்ல அன்பு என்பது. பின் ‘காதல் செய்ம்மின்’ என்று கூறுகிறாரே என்ன பொருள்?
‘கல்லைப் பிசைந்து கனியாக்கி’ என்பார் மாணிக்கவாசகர். கல் ஒரு கடினமான பொருள். அதைப் பிசைய முடியாது. உடைத்து நொறுக்கினாலும் துகள்கள்தான் வரும். ஆனால் இறைவன் கல்லைப் பிசைந்து கனியாக்கினான் என்று பாடுகின்றார்.
“நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருக”
( அருணகிரியார்)
அன்பு மிகுதியானால் அது உருக்கத்தைக் கொடுக்கும். நமது நண்பர் ஒருவர் அவரது மகளைத் திருமணம் செய்து கொடுக்கிறார். மாப்பிள்ளை வெளிநாட்டில் இருக்கிறார். திருமணம் செய்து பெண்ணையும், மாப்பிள்ளையையும் வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கிறார்கள் பெற்றோர்கள். நட்பு கருதி நண்பரும் வழி அனுப்பு விழாவிற்குச் செல்கிறார். இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்துதான் தனது மகளைப் பார்க்கப் போகின்றோம் என்று நினைத்து பெற்றோர் அழுகின்றனர். மகளும் அழுகின்றாள். மாப்பிள்ளையோ நண்பரோ அழவில்லை. ஆறுதல் கூறுகின்றனர். ஏன் இவர்களுக்கு அழுகை வரவில்லை. பெற்றோருக்கு நீண்டநாள் வளர்த்த பாசம்; அன்பு அதிகம். அதிகமான அன்பின் விளைவாக உருக்கம் வந்தது. உருக்கம் காரணமாக கண்ணீர் பெருகியது.
“அன்பே நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர்
அதனால் உடம்பு நனைந்து நனைந்து..”
-
என்பார் வள்ளல்பெருமான்.
அன்பு அதிகமானால் உருக்கம் அதிகமாகும். அதன்மூலம் கண்ணீர் ஊற்றெடுக்கும்! பெருகும்! காதல் என்பதற்கு அன்பு என்னும் பொருள்கொள்வோமானால் காதலில் பலவிதமான காதல் உள்ளது. மனைவி மீது காதல், மக்கள் மீது காதல், பொன், பொருள், வீடு, மனை இவைகளின் மீது காதல் என்று பலதரங்களில் காதல் விரிகின்றது. காதல் என்பதற்கு காமம் என்று எடுத்துக்கொண்டால் நாம் எதையெல்லாம் அனுபவிக்க வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அவையெல்லாம் காமம்தான். காமம் நாம் விரும்பும் பொருள்கள் தொடர்பாகவோ அல்லது நாம் விரும்பும் இனத்தின் சார்பாகவோ (ஆண், பெண்) ஏற்படலாம். அதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் அது நியாயமானதாக, அறத்திற்கு உட்பட்டதாக இருக்குமானால் காமம் நலம் தரும்.
இதனை விவேக சிந்தாமணி ஆசிரியர் கூறுகிறார்.
“நற்குணமுடைய வேந்தை நயந்து சேவித்தல் ஒன்று
பொற்புடை மகளிரோடு பொருந்தியே வாழ்தல் ஒன்று
பற்பலரோடு நன்னூல் பகர்ந்து வாசித்தல் ஒன்று
சொற்பெறும் இவை மூன்றும் இம்மையில் சுவர்க்கமாமே”
(விவேக சிந்தாமணி)
நற்குணமுடைய வேந்தரை அணுகி வாழ்தலும், பொற்புடைய மகளிரைச் சேர்ந்து வாழ்தலும், நன்னூல் பகர்ந்து வாசித்தலும், சுவர்க்கலோக இன்பத்திற்குச் சமமான இன்பத்தை அளிக்கும். ஆனால் அதே காமம் அநியாயமானதாகவும், தர்மத்திற்கும், நீதிக்கும் புறம்பானதாகவும் இருந்தால்,
“காமமே குலத்தினையும் நலத்தினையும் கெடுக்க வந்த களங்கம் ஆகும்
காமமே தரித்திரங்கள் அனைத்தையும் புகட்டி வைக்கும் கடாரம் ஆகும்
காமமே பரகதிக்குச் செல்லாமல் வழி அடைக்கும் கபாடம் ஆகும்
காமமே அனைவரையும் பகைஆக்கிக் கழுத்தரியும் கத்தியாமே”
(விவேக சிந்தாமணி)
No comments:
Post a Comment