நஞ்சையும் அடக்கும் வேதியன்
பாஸ்பரஸ் என்னும் எரிவாயு நிறைந்த
ஜாடி எப்போதும் தண்ணீருக்குள்தான் வைக்கப்பட்டிருக்க வேண்டும். பாஸ்பரஸ்
ஜாடி வெளியில் இருந்தால் நெருப்பு பிடித்துக் கொள்ளும். இப்படித்தான் சித்த
மலம் அற்றுச் சிவமாம்தன்மை பெறக்கூடிய ஒரு பக்தன் எந்தச் சூழ்நிலையில் இருக்கவேண்டும்
என்று வேதியன் விரும்புகின்றான். எந்த உணவு உண்ண வேண்டும்; எப்போது தூங்கவேண்டும்; எப்போது விழிக்கவேண்டும்; யாருடன் நட்பு கொள்ளவேண்டும்
என்றெல்லாம் விதிசெய்கின்றான் வேதியன்.
புதிதாகச் செடிவளர்க்க விரும்பும்
ஒருதோட்டக்காரன் செடிவளரும் வரை ஆடு மாடுகள் மேயாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். செடிக்கு
வேலி கட்டிவிட்டால் ஆடு மாடுகள் மேயாது. செடி வளர்ந்து விட்டால் மாடுகள்
மேய்ந்தாலும் பிழைத்துக்கொள்ளும். அதுபோல்தான் சித்தமலம் அறுவித்து ஆன்மீகப் பயிரை வளர்க்க விரும்பும்
ஒவ்வொரு சாதகனும் தனக்குத்தானே ஒருவேலி அமைத்து தன்னுடைய தீய உணர்ச்சிகள் தன்னை மேய்ந்து
விடாமல் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். இதையெல்லாம் அடியவர் கூட்டு செய்து
விடும் என்பதால், வேதியலுக்கு உட்படும் பக்தனை அடியவர்கூட்டு என்ற கிரியாஊக்கியுடன்
இணைக்கின்றது சிவபரம்பொருள்.
சிவபரம்பொருளுடன் இணைந்த தொண்டரின் நிலை
என்ன? சித்தமலம் அறுந்தவுடன் சிவமாம்
தன்மை அடியவனுக்கு வந்துவிடுகின்றது. சிலவேதியல் விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக்கூடத்தில்
ஆராயும்போது, வேதியல் கலவை வெடித்துச் சிதறி வேதியனின் உயிருக்கே ஆபத்தாகிவிடும். ஆனால்
நமது வேதியன் எல்லா உயிருமாய்த் தழைத்துப் பிழைத்து அவை அல்லையாய் நிற்கும் எத்தன் அல்லவா! அதனால்
அவன் வேதித்தல் செய்யும்போது ஏற்படும் பக்க விளைவுகளையும், பின் விளைவுகளையும், விபரீத
விளைவுகளையும் தனது கட்டுப்பாட்டிற்குள்ளேயே வைத்துள்ளான் சிவவேதியன்.
“இடரினும் தளரினும் எனது உறுநோய்
தொடரினும்
உன்கழல் தொழுதெழுவேன்
கடல்தனில்
அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில்
அடக்கிய வேதியனே.....”
(திருஞானசம்பந்தர்)
முன்னைப் பழம்பொருட்கும், முன்னைப் பழம்பொருளாய்; பின்னைப்
புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனாய் உள்ள பரம்பொருள், கடல்தனில் அமுதொடு கலந்த
நஞ்சை மிடறினில் அடக்கும் வேதியனாகத் திகழ்கின்றான். பாற்கடலைத் தேவர்களும், அசுரர்களும் கடைந்தார்கள். அமுதொடு
நஞ்சும் வந்தது. வேதியன் வேதித்தலைத் தனது கட்டுப்பாட்டிற்குள்
வைத்திருந்தான். அதனால் நஞ்சு உள்ளே சென்றாலும்
ஆபத்து; வெளியில் இருந்தாலும் ஆபத்து. எனவே தொண்டையில் நஞ்சைத் தக்கவைத்துக்
கொண்டான் நீலகண்டன்.
அதனால் அவனுக்கும் அழிவில்லை;
உயிர்க்கூட்டங்களுக்கும்
அழிவில்லை. அவன் தலைசிறந்த வேதியன். ஆதலால்
பக்கவிளைவு, பின்விளைவு, எதிர்விளைவு ஏற்படாமல் நஞ்சை தனது மிடறினில் அடக்கிக்கொண்டான். வேதித்து பக்குவம் செய்கின்றான்.
No comments:
Post a Comment