திருநாவுக்கரசா் வரலாறு காட்டும் பாடம் - பகுதி 2
வான்வெளிப் பயணமாக வருகின்றான் இராவணன். கயிலைமலையைக் கண்டதும், வான்வெளி பயணத்திற்குக் கயிலை மலை குறுக்கே நிற்பதாக உணருகின்றான். மலையைத் தூக்கி நகர்த்தி வைத்துவிட்டுத் தனது பயணத்தைத் தொடர நினைக்கின்றான். எதிரில் கயிலைமலை குறுக்கிட்டதால் தன் பாதையை மாற்றி அமைத்துக்கொள்ள இராவணனின் ஆணவம் குறுக்கிட்டது. மலையை அசைத்துப் பெயர்க்க நினைக்கின்றான். மலைமகள் அஞ்சுகின்றாள். கயிலைநாதன் தனது பெருவிரலை ஊன்றவும், இராவணன் மலைக்கு இடையில் அகப்பட்டுக் கொண்டான். அங்கு தவம் இயற்றிக் கொண்டிருந்த வாகீச முனிவர் (திருநாவுக்கரசர்) இராவணன் படும் துன்பத்தைக் கண்டு இரக்கம் கொள்கின்றார். சங்கரன் சாமகானப் பிரியன் என்று குறிப்பால் உணர்த்துகின்றார். அதுகேட்ட இராவணன் தனது ஒரு தலையினைத் துண்டித்து கை நரம்புகள் கொண்டு வீணை செய்து சாமகானம் இசைத்தான். அவனுக்குச் சிவனருள் கிடைத்தது.
சிவபெருமானது உள்ளக்குறிப்பு அறியாது செயல்பட்டோமோ என வருந்துகின்றார் வாகீசமுனி. நாம் தவறு செய்யாமல் இருந்தால் மட்டும் போதாது. தவறு செய்பவர்களுடன் கூட்டணியும் வைத்துக் கொள்ளக்கூடாது என்பதை உணர்ந்தார். அதனால் ஒவ்வொரு பதிகமுடிவிலும் இராவணனைக் குறித்துப் பாடுகின்றார்.
“முன்னம் அடியேன் அறியாமையினால்
முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப்
பின்னை அடியேன் உமக்கு ஆளும் பட்டேன்
சுடுகின்றது சூலை தவிர்த்தருள்வீர்
தன்னை அடைந்தவர் வினை தீர்ப்பது அன்றோ
தலையாயவர் தம்
கடனாவதுதான்
அன்ன நடையார் அதிகைக் கெடில
வீரட்டானத் துறை அம்மானே”
(திருமுறை 4)
முன்னம் அறியாமையினால் செய்த குற்றத்திற்கான தண்டனையை இப்போது அனுபவித்து வருகின்றேன். நான் ஆட்பட்ட பிறகு என்னைத் தாங்கிக் கொள்வதுதானே உனது கடமை என்று கடந்த பிறவியில் உள்ள வினைத் தொடர்பை நினைவுபடுத்திப் பாடுகின்றார் திருநாவுக்கரசர்.
‘கூற்றாயினவாறு விலக்ககிலீர்’ என்று தனது முதல் பதிகத்தைத் தொடங்குகின்றார் அப்பரடிகள். இறைவனால் சூலைநோய் தரப்பட்டது. அதனால், அதன் கொடுமை தாங்க முடியாததாகத்தான் இருக்கமுடியும். அப்படி ஒரு கொடுமையை அனுபவித்ததால் கூற்றாயினவாறு விலக்ககிலீர் என்று பாடுவதாக நினைக்கின்றோம். ஆனால் நீதிபதியிடம் நீதிகேட்கும் பாவனையில்தான் இப்பதிகத்தைப் பாடுகின்றார் என்பர் ஆன்றோர்.
தாய்க்கும், பிள்ளைக்கும் அல்லது தந்தைக்கும், பிள்ளைக்கும் என்று குடும்பத்தில் ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு வருகிறது என வைத்துக் கொள்வோம். செய்த தவற்றிற்கு யார் காரணமாக இருந்தாலும் அத்தவறு தன்னுடையது என்று யாரும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். தவறு தன்னுடையதுதான் என்று ஒப்புக்கொண்டுவிட்டாலே வாதப் பிரதிவாதத்திற்கும், கருத்து வேறுபாட்டிற்கும் அங்கு இடமில்லாமல் போய்விடும். தனது பெற்றோரிடமோ, குருவிடமோ, தெய்வத்திடமோ தவறு என்னுடையதுதான் இனிமேல் தவறு செய்யமாட்டேன் என்று ஒப்புக்கொள்ளும் ஒரு மனத்தெளிவு யாருக்கும் வருவதில்லை. திருநாவுக்கரசருக்கு சூலைநோய் வந்ததும், தான் சமண சமயத்திற்குப் போனதற்கான காரணத்தை இறைவனிடம் கூறுகின்றார்.
தொடரும்.....
குரு வாழ்க! குருவே துணை!!
ReplyDelete