பதிவு மணமும் , பழமை மணமும்
“மூவாத திருமகிழை முக்காலம் வலம்வந்து
மேவாது இங்குயான் அகலேன்”
(பெரியபுராணம்)
எனச் சூளுரை செய்தது , எங்கே எதைப் பதிவு செய்ய வேண்டுமோ அங்கே பதிவு செய்த திறத்தைத் காட்டுகின்றது.
மகிழ மரத்தடியில் இருக்கும் ஈசரிடம் தன் கணக்கைப் பதிவுசெய்து விடுகின்றார் சங்கிலியார். இந்தப் பதிவுத் திருமணத்திற்குப் பிறகு பெரியவர் கூடி ஏற்பாடு செய்து மணமுடித்து வைக்கின்றார்கள்.
சுந்தரரும் , சங்கிலியாரும் மனநிறைவுடன் வாழ்ந்து வருகின்றார்கள்.
திருவாரூர் வசந்தவிழா நினைவிற்கு வந்தது சுந்தரருக்கு.
“ஏழிசையாய் இசைப்பயனாய்
இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் யான் செய்யும்
துரிசுகளுக்கு உடனாகி
மாழை
ஒண்கண் பரவையைத் தந்து
ஆண்டானை மதியில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன்
என் ஆரூர் இறைவனையே”
(திருமுறை 7)
என்று ஆரூர் இறைவனை நினைந்து உருகுகின்றார். சங்கிலியாரிடம் செய்துகொடுத்த சத்தியம் நினைவிற்கு வருகின்றது. இங்கு யான் அகலகில்லேன் என்று கூறிய சூளுரை மனத்தை அழுத்தியது.
ஒற்றியூருக்கும் , திருவாரூரூக்கும் இடையில் பாவிடை ஆடு தயிர்போல் உள்ளம் பரந்து கரந்தது. எப்படியாகிலும் திருவாரூர் செல்லவேண்டும் என்னும் எண்ணம் மேலோங்கியது.
திருவொற்றியூர் பெருமானிடம் விடைபெற்றுக்கொண்டு திருவாரூரை நோக்கிப் பயணம் புறப்படுகின்றார் சுந்தரர். திருவொற்றியூர் எல்லை தாண்டியதும் கண் இரண்டும் தெரியவில்லை.
மூர்ச்சித்து விழுந்தார்.
அடியவரே ஆனாலும், குற்றம் குற்றமே. அதற்கான பதிவை அனுபவித்துத்தான் ஆகவேண்டும் எனப் பதிவு செய்வது சுந்தரரின் இவ்வரலாற்று நிகழ்வு..
No comments:
Post a Comment