கடவுள் ஒரு வேதியனா?
நமது அகத்தே ஒரு
இரசாயன மாறுதலை ஏற்படுத்துகிறார் நாம் காணப்போகும் வேதியன். சற்று மாறுபட்டவன். புறப்பொருள்களைக் கொண்டு வேதித்தல் நடத்தும் விஞ்ஞானி, தான் படித்த வேதியல் படிப்பின் துணைகொண்டும், தனக்கு முன்னால் அனுபவப்பட்ட விஞ்ஞானிகளின் துணைகொண்டும், தன் அனுபவத்தின் துணைகொண்டும், இரசாயனக் குடுவையில் நிகழும் மாறுதல்களை எடுத்து இயம்புகின்றான். மனித உடலில் ஏற்படும் மாறுதல் மூலமாக உடலில் உண்டாகும் நோய்களுக்கு மருந்துகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துவிட்டார்கள். ஆனால் அகத்திலும், உணர்வு அலைகளிலும் ஏற்படும் மாறுதலை சாதாரணமான வேதியனால் கண்டுபிடிக்க இயலாது. நமது மெய்ஞ்ஞானிகள் ஆண்டாண்டு காலமாகப் பெரிய வேதியனோடு தொடர்பு வைத்திருந்தார்கள். அத்தொடர்பின் காரணமாக அவர்களால் அகத்தாய்வு செய்யமுடிந்தது.
அப்படி அகத்தாய்வு செய்த மெய்ஞ்ஞானிகள் கண்ட உண்மை என்ன? ஆசையே துன்பத்திற்குக் காரணம். பேராசை பெருநட்டம். அனைத்து நோய்களுக்கும், மன உளைச்சல்களுக்கும் பரபரப்பான வாழ்க்கையும், பேராசைகளுமேதான் காரணம் என்று உணர்ந்தார்கள். தான் உணர்ந்த ஒன்றை உலக மக்களும் உணரும்படி அருட்பாக்களை விட்டுச் சென்றார்கள்.
ஆசை வயப்படும்போது ஒரு
மனிதன் மனநிலை, உயிர்நிலை, உணர்வுநிலை எப்படித் திரிந்து போகின்றன என்பதை நமக்கு உணர்த்துவதற்குப் பெரிய ஆராய்ச்சி சாலைகளை ஏற்படுத்தினார்கள். அந்த ஆராய்ச்சி சாலைகள் எவையெவை? எங்கே சென்று நாம் நம்மை பரிசோதித்துக் கொள்ளலாம்? என்று நமக்கு வழிகாட்டுகின்றார்கள் நமது முன்னோர்கள். விஞ்ஞானிகள் ஆய்வு செய்தது உயிரற்ற ஜடப்பொருள்களைக் கொண்டும், உயிரற்ற சோதனைக் குடுவைகளைக் கொண்டும் நடத்தியது.
ஆனால் நம் மெய்ஞ்ஞானிகள் உயிரோட்டமும், உணர்வோட்டமும் கொண்ட மனிதஉடலில் சோதனை செய்தார்கள். ஜடப்பொருள் கொண்டு தயாரிக்கும் சோதனையானது எந்த காலத்திலும், எந்த நேரத்திலும், எந்த நாட்டிலும் ஒரேவிதமான பலனைத்தான் காட்டும். உதாரணமாக வெள்ளி என்ற ஒரு உலோகத்தினை எடுத்துக்கொள்வோம். வெள்ளியில் செய்த அணிகலன்கள் புதிதாக இருக்கும்போது பளீரென்று இருக்கும். அணிந்து சில
நாட்கள் கழிந்தால் காற்று, வெயில், நீர் இவை பட்டவுடன் தன் நிறம் மாறிவிடும். இதற்கு என்ன காரணம்? விஞ்ஞானிகள் இதற்கான காரணத்தை ஆராய்ந்தார்கள்.
மாறா உண்மை
வெள்ளி என்னும் உலோகம் வெளிக்காற்றில் இருக்கும் ஆக்ஸிஜனுடன் இணைந்து வெள்ளி ஆக்ஸைடு உருவாகிறது. வெள்ளி ஆக்ஸைடு வெள்ளிபோல் உள்ளது அல்ல. சற்று கருமையுடன் கூடியது. அதனால் கருமை கலந்த வெண்மை தெரிகிறது என்றார்கள் விஞ்ஞானிகள். இந்த வெள்ளியும், வெள்ளி ஆக்ஸைடும் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் இந்தியாவில் உள்ள நகரங்களில் மட்டுமல்லாது வெளிநாட்டில் உள்ள எல்லா நகரங்களிலும் இதே மாதிரியான மாறுதலை அடையக் கூடியதுதான் என்றும் நிரூபணம் செய்தார்கள்.
அதேபோல் ஒரு இரும்பை எடுத்துக்கொள்வோம். அந்த இரும்புத் துண்டை நீண்ட நாட்கள் மழையிலும், வெயிலிலும் விட்டுவிட்டால் இரும்பு துரு ஏறிவிடும். துரு ஏறிய இரும்பானது தனது உறுதிப்பாட்டை இழந்துவிடும். இதுவும் எல்லா காலத்திற்கும் எல்லாத் தேசத்திற்கும் பொருந்துவதான ஒரு பொதுவிதியாகும்.
ஆனால் மனிதனின் உடல் அமைப்பும், உணர்ச்சிகளின் வேகமும் அப்படி அல்லவே! உயிர்கள்தோறும்
குணங்கள் வேறு. குணங்கள் வேறுபடும் உயிர்கள் வெவ்வேறு சூழலில் வெவ்வேறு விதமாக தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக ஒரு பூனையை எடுத்துக்கொள்வோம். பூனை தனது வாயால்தான் தனது குட்டியைக் கவ்வும். அதே வாயால்தான் எலியையும் கவ்வும். பூனைக்குட்டி தன்
தாயின் பிடியில் இருக்கும்போது தாய்மை அன்பை அனுபவிக்கின்றது. அதே பூனையின் வாயில் இருக்கும் எலி எந்த உணர்வை அனுபவிக்கும் என்று நினைத்துப் பார்த்தால் நமக்கு நன்கு புலனாகும். பூனைக்குட்டியின் உணர்வு வேறு விதமானது. எலியின் உணர்வு வேறுவிதமானது.
வேத விற்பன்னன்
நமது மெய்ஞ்ஞானிகள் இந்த உணர்வுகளை எல்லாம் நமக்குப் படம்பிடித்துக் காட்டினார்கள். பாண்டியனிடம் அமைச்சராக இருந்தார் திருவாதவூரர். குதிரைப் படைகள் பலவீனமாக உள்ளன என்று அரசனிடம் சேனாதிபதி தெரிவித்தார். உடனே அரசன் குதிரை வாங்குவதற்கு திருவாதவூரரை அனுப்பினான். வாதவூரர் திருப்பெருந்துறை என்னும் இடத்தை நெருங்குகின்றார். சிவவேதியன், வாதவூரராக இருந்த அமைச்சரை மாணிக்கவாசகராக வேதிக்கத் திருவுள்ளம் கொண்டார். வேதித்தல் என்னும் இரசாயன மாறுதலை வாதவூரர் உடலிலும், உணர்விலும் செலுத்தினார். எப்படி செலுத்தினார்? ‘எற்புத் துளைதோறும் ஏற்றினன்’ என்றார் மணிவாசகர்.
இதுவரை ஊன் உணர்வோடு வாதவூரராக இருந்தார். தற்போது ஞான உணர்வாகிய இறை உணர்வைப் பெற்றார். கல்வி, செல்வம் என்ற நிலையில் அதை அறியும் உணர்வில் இருந்தவர், தற்போது தன் தலைவனை அறியும் முனைப்பில் தன்னை இழந்தார்;. தலைவன் தாள் பட்டார். எற்புத்துளையில் என்ன இரசாயன மாறுதலை ஏற்றினான் தலைவன்? அப்படி இரசாயன மாறுதல் அடைந்த தம் உடலும், உணர்வும் என்ன ஆயிற்று? மணிவாசகரே கூறுகிறார்.
மாறி நின்று என்னை மயக்கிடும் வஞ்சப்
புலன் ஐந்தின் வழி அடைத்து; அமுதே
ஊறி நின்று; என் உள் எழு பரஞ் சோதி!
உள்ளவா காண வந்தருளாய்!
தேறலின் தெளிவே! சிவபெருமானே!
திருப்பெருந்துறை உறை சிவனே!
ஈறு இலாப் பதங்கள் யாவையும் கடந்த
இன்பமே! என்னுடை அன்பே!
(திருவாசகம்)
இறைவனே பொறி புலன்களை மடைமாற்றம் செய்து உள்ளொளி சோதியையும் காட்டிக் கொடுத்தான். அவரிடம் ஏற்பட்ட மாறுதலை எந்த அளவுமானி கொண்டும் அளவிடமுடியாது. ஈறிலாப் பதங்கள் அனைத்தையும் கடந்த இன்பத்தை அனுபவித்தார் மணிவாசகர். மணிவாசகர் காணும்படியாக வந்து அருளிச் செய்தலால்ää தேறலின் தெளிவையும் உணர்ந்தார்.
ஓர் விஞ்ஞானி தனது வேதியல் ஆராய்ச்சியை நிரூபணம் செய்தால் விஞ்ஞான உலகம் அதனை ஏற்றுக்கொள்ளும். உயிரற்ற பொருள் கால, தேச வர்த்தமானங்களால் மாறுபடாது. ஆனால் பொறி புலன்களுடன் கூடிய மனிதனை எந்த ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை செய்வது? மாறுபடும் கால, தேச, வர்த்தமானங்களால் மாறுபாடு அடையக்கூடிய மனித உணர்வுகளை எந்த ஆய்வுக்கூடத்தில் நிரூபணம் செய்வது?.
உடம்பு எல்லாம் கண்ணாக இருந்து கண்ணீர் பெருக்கினால் எப்படி இருக்குமோ அப்படி உணர்ந்தார் மணிவாசகர். வேறு உலகியல் பொருள் எதனாலும் தனக்கு இந்த மாற்றத்தை உண்டு பண்ணமுடியாது. கல்வி கேள்விகளிலும், செல்வத்திலும் திளைத்த தன்னையும் தன் உணர்வையும் உருக வைக்க மிகப்பெரிய வேதியன் ஒருவனால்தான் முடியும். அவன்தான் ‘வான் பழித்து இம் மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல்’. தகுதி பாராமல் கொடுப்பதுதானே வள்ளலுக்கு இலக்கணம். என்னையும் ஓர் வார்த்தையுள் படுத்த வேதியனாகிய இறைவன் எனது தகுதி பாராமல் எனக்குக் கருணை செய்கின்றான் என்பதை உணர்கிறார் மணிவாசகர். அவர் உணர்ந்த ஒன்றை நமக்கும் உணர்த்துகிறார்.
ஓர்
வார்த்தை இந்த அளவு இரசாயன மாறுதலைச் செய்யுமா என்றால் எத்தனையோ அடியவர்கள் விஷயத்தில் செய்துள்ளது. அதை அவர்களே கூறுகிறார்கள்.
“முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத்
தன்னை மறந்தாள் தன்நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன்தாளே”
(அப்பர் சுவாமிகள்)
காதலித்துத் திருமணம் செய்துகொண்டு, பின்னா்
பிரியும் காதலா்களைக் கேட்டால் அவனோ, அவளோ தகுதியானவா்கள் இல்லை என்கிறார்கள். ஆனால் கண்ணிற்குத் தோன்றாமல் உணா்விற்குத் தோன்றும்
பேரண்ட நாயகனுக்குத் தன்னை மறந்து தன் நாமம் கெட்டுத் தலைவன்தாள் சூடும் புனிதமான உறவே
வேதித்தலின் உச்சக்கட்ட பண்பு.
குருவின் ஒரு
வார்த்தை அடியவர் உணர்வில் ஓர் இரசாயன மாறுதலை உண்டு பண்ணியது. அதனால் வாதவூரருக்கு இதுவரை இருந்த உடல் உணர்வு நீங்கி, உள்ளம் உருகிற்று.
Vannakkam Amma
ReplyDeleteSughan-Anandhi